ஐக்கிய அமீரகத்திலும் கரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. அங்கிருக்கும் இந்தியர்கள் உட்பட பலரும் கரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் வர, அமீரக ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வத்தலகுண்டைச் சேர்ந்த கவிஞர் சிவமணியைத் தொடர்புகொண்டு, அங்குள்ள நிலவரம் பற்றிக் கேட்டோம்.

விரிவாகவே நிலைமையை விவரிக்கத் தொடங்கிய சிவமணி... ”மார்ச் முதல் வாரத்திலேயே கரோனாவின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட அமீரக அரசாங்கம், கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கிவிட்டது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்புக்கு ஆளாக்கப்பட்டனர். வீட்டிலிருந்து வேலை பார்க்கும் படி ஊழியர்களுக்கு உத்தரவிட்ட அரசு, பொதுமக்களின் நடமாட்டத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்தது.

இதனால் சாலைகளும், அலுவலகங்களும் பூங்காக்களும் அமைதியில் உறைந்திருக்கிறது. இன்று வரை 30,000 பேரை பரிசோதித்ததில் 7,500 பேருக்கு மேல் தொற்றுக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்தியர்களும் உண்டு. தரமான சிகிச்சை எல்லோருக்கும் தரப்பட்டு வருகிறது. மக்கள் அவசரமாக வெளியே போகவேண்டும் என்றால் ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே அனுமதி. இதன்பின் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகுதான் விண்ணப்பிக்க முடியும்.


ரமலான் தொடங்க இருப்பதை அடுத்து, அமீரகத்தில் உள்ள வசதியற்ற 44 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை அளிக்க அபுதாபி பட்டத்து இளவரசர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இங்கு சுற்றுலா விசாவில் வந்திருப்போர், கரோனா ஆபத்து நீங்கும் வரை இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவ ஊழியர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க, கரோனா நோயாளிகளை அழைத்து வர கேப்சூல் வடிவ படுக்கையுடன் கூடிய ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிலுள்ள ஆக்சிஜன் வசதியுள்ள கண்ணாடி பெட்டிக்குள், நோயாளியைப் பாதுகாப்பாக கொண்டுசெல்கின்றனர்.
இங்கு வாழும் மக்களுக்கு உற்சாகம் தரும் வகையில் ஏப்ரல் 17- ஆம் தேதி இரவு 9 மணிக்கு, மக்கள் பால்கனியில் இருக்க, அமீரகம் முழுவதும் காவல் துறையின் துணையோடு தேசிய கீதத்தை ஒலிக்கச்செய்தனர். மக்களுக்குப் பொருளாதாரக் கவலையை ஏற்படுத்தாமல், கரோனாவில் இருந்து விரைவில் மீளுவோம் என்ற நம்பிக்கையை அமீரக அரசு ஏற்படுத்திவருகிறது. என்னைப் போன்றவர்கள் இங்கே பாதுகாப்பாகவே உணர்கிறோம்” என்றார் உற்சாகம் இழக்காமல்.