Skip to main content

கணவன் - மனைவி பிரச்சனை; பஞ்சாயத்து பேசிய அரசியல் பிரமுகர் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைப்பு!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
set fire to political figure who spoke on husband-wife issue

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எறையூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி, இவரது மனைவி மாயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அந்தப் பெண், அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. மாயா குடும்பத்தினர் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமென அதேகிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்க பேரவையின் கள்ளக்குறிச்சி மாவட்ட அமைப்பாளராக இருக்கும் சூசைநாதன் என்பவரிடம் சென்றுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சூசைநாதன், சின்னத்தம்பியை அழைத்து பஞ்சாயத்து பேசியுள்ளார். அப்பொழுது சூசைநாதனுக்கும் சின்னதம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது சமரசம் பேசிய சூசைநாதன் சின்னத்தம்பியை, மனைவியை வைத்து குடும்பம் நடத்து தெரியவில்லை எனத் திட்டியதாகவும் கூறப்படுகிறது. அதோடு, சின்னதம்பியை சூசைநாதன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பஞ்சாயத்து பேசிய சூசைநாதன் பேசிய பேச்சுகள் சின்னதம்பியை மனமுடைய செய்துள்ளது, மனைவியால் தனக்கு அவமானமாகிவிட்டதாக மன சஞ்சலத்தில் இருந்துள்ளார் சின்னதம்பி.

இதனால் ஆத்திரம் அடைந்த சின்னதம்பி திங்கள் கிழமை அதிகாலை சுமார் 2.45 மணியளவில் சூசைநாதனின் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார் சின்னதம்பி. வீட்டின் வெளியே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சூசைநாதன் மீது சின்னத்தம்பி தான் கொண்டுவந்திருந்த பெட்ரோலை ஊற்றியவர் சூசை நாதன் கண் விழித்து சுதாரிக்கும் முன்பே, தீ குச்சியை உரசி வீசியுள்ளார்.

சூசைநாதன் உடலில் தீ பற்றி எரிய துவங்கியுள்ளது, அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். உடல் முழுவதும் பலத்த தீக்காயம் அடைந்து பாதிக்கப்பட்ட சூசைநாதன் உடனடியாக சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சூசைநாதன் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் பற்றி தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  சூசைநாதன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற சின்ன தம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த சூசைநாதன்  மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இறையூர் கிராமத்தில் கிருத்துவ தேவாலயம் உள்ளது தேவாலயத்தில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தத் தேர் திருவிழாவில் சமூக ரீதியான பிரச்சனைகள் தொடர்ந்து பலமுறை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிருத்துவ தேவாலயம் பகுதி மக்கள் மற்றும் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் தேர் பவனி வருதல் குறித்து சாதி ரீதியான கலவரம் நடந்தது.

இதில் அப்போது எஸ்பியாக இருந்த அமுல்ராஜ் தலைமையில் துப்பாக்கி சூடு நடைபெற்று பிரச்சனை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தப் பிரச்சனையில் சூசை தலையிட்டு நீதிமன்றம் வரை சென்று பட்டியலின மக்கள் சாமி வழி படுவதற்கான உரிமையை மீட்டு சமூக ஆர்வலராக செயல்படுகிறார். இதைப் பிடிக்காத ஒரு சில நபர்கள் அவர் மீது திட்டமிட்டு இதுபோன்ற தாக்குதல் நடத்த உதவியிருக்கலாம் என அவரது உறவினர்கள் மற்றும் விசிக கட்சியினர் இடையே சந்தேகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிறுமியைத் திருமணம் செய்து குடும்பம் நடத்திய இளைஞர்!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
young man who married the girl

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நல்லகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் என்கிற முகமது ஆதம். இவர் சிறுமியை திருமணம் செய்ததாக கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை ஊர் நல அலுவலராக பணிபுரியும் கிருஷ்ணவேணி என்பவர் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். இதில் முகமது ஆதம் 17 வயது  சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்தச் சிறுமி தற்போது 6 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் முகமது ஆதம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்; தீயாகப் பரவிவரும் வீடியோ!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
 youths are intoxicated with cannabis in Palani

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலை அடிவாரத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் சில இளைஞர்கள் போதையில் மிதப்பது போல் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சாவை பயன்படுத்தி அதன் மூலம் போதை ஏறி பூங்காவில் விழுந்து கிடப்பது போல  வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பயன்படுத்துவது மற்றும் பொது இடத்தில் விழுந்து கிடப்பது போன்று வீடியோ பதிவிட்ட இளைஞர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வந்தனர்.  அதைத் தொடர்ந்து பழனி நகர டிஎஸ்பி தனஞ்ஜெயன் உத்தரவின் பேரில் போலீசார் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞர்களைத் தேடி வருகின்றனர். ஏற்கெனவே பழனி  நகரில் உள்ள அடிவாரம், பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேசன் உள்பட சில இடங்களிலும் அதுபோல் பழனியைச் சுற்றியுள்ள பாலசமுத்திரம், ஆயக்குடி, நெய்க்காரபட்டி உள்பட சில இடங்களிலும் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.  

 youths are intoxicated with cannabis in Palani

இது சம்மந்தமாக பழனி டிஎஸ்பி தனஞ்ஜெயனிடம் கேட்டபோது, “அந்த  வீடியோ குறித்து விசாரணை செய்து, அந்த இளைஞர்களைத் தேடி வருகிறோம். கூடிய விரைவில் கைது செய்வோம். இப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மூன்று பேரை ஏற்கனவே கைது செய்து இருக்கிறேன். மேலும் கஞ்சா புழக்கம் இருப்பதாக தகவலும் வந்திருப்பதால் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து  சமூக விரோத செயலில் ஈடுபடும் அந்தக் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இருப்பினும், பழனியில் இதுபோன்ற வீடியோ எடுத்து இளைஞர்கள் இணையத்தளங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி, கொடைக்கானலில் பெண்களை வைத்து பணம் பறிக்கும் கும்பலை கையும் களவுமாக பிடிக்க எஸ்பி பிரதீப் அதிரடி நடவடிக்கை  எடுத்திருந்தார். அதுபோல் தற்போது பழனி மட்டுமல்ல திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  பல பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. இது சம்மந்தமாக பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி.செந்தில்குமாரும் மாவட்ட எஸ்.பி.பிரதீப்பிடம் தொடர்பு கொண்டு பழனி உட்பட சில இடங்களில் கஞ்சா  விற்கப்படுவதாக தகவல் வருவதால் அதை ஒடுக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.