தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோயம்பேட்டில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சுமார் 6,900 பேர். கரோனா வைரஸ் தொற்று காரணமாக கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால், பெரும்பாலானோர் சொந்த மாவட்டங்களுக்கு சென்றனர். அவர்கள் மூலம் கடலூர் மாவட்டத்தில் இன்று வரை 395 பேர்களும், அரியலூர் மாவட்டத்தில் 308 பேர்கள், விழுப்புரம் மாவட்டத்தில் 298 பேர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 440 பேர்கள் என கோயம்பேடு மார்க்கெட் மூலம் கரோனா பரவியுள்ளது.
சென்னையில் மட்டும் கோயம்பேடு மார்க்கெட் மூலம் ஆயிரம் பேர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் மூலம் நோய் பரவாமல் சேலம், ஈரோடு, விருதுநகர், கோவை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, நாகை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் மாவட்டங்கள் தப்பியுள்ளன.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் கடலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கோயம்பேட்டில் வேலை செய்யும்போது ஆரம்பகட்டத்தில் கரோனா பரவல் ஆரம்பித்தபோது நோய் பரவி விடுமோ அச்சம் காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டபோது பெரும்பாலான தொழிலாளர்கள் அவரவர் ஊர்களுக்கு வந்து விட்டனர். மார்ச் 22 ஊரடங்கு உத்தரவு போக்குவரத்து தடைகள் காரணமாக தமிழகமே ஸ்தம்பித்துப் போயிருந்தது.
இந்த நேரத்தில் கோயம்பேடு மார்க்கெட் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அங்கு இருந்த தொழிலாளர்கள் நோய் பரவிவிடும் பயம் காரணமாக அவரவர் ஊர்களுக்கு சென்று விட்டதால் மார்க்கெட்டில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் அங்குள்ள தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து வியாபாரிகள் லாரிகளில் இருந்து சரக்குகளை இறக்கி கடைகளுக்கு அனுப்பியுள்ளனர். இதனை அங்கிருந்த சில தொழிலாளர்கள் நோய் அச்சம் காரணமாக ஊருக்கு சென்றவர்கள் பலருக்கும் போன் செய்து, ஆள் பற்றாக்குறை உள்ளதால் சம்பளம் அதிகமாக கிடைக்கிறது, அதிக அளவு சம்பாதிக்கலாம் என்று தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து வேப்பூர், திட்டக்குடி, செந்துறை ஆகிய தாலுகாக்களை சேர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் சென்னை கோயம்பேடு நோக்கி பயணித்தார்கள். லாரிகள், சரக்கு வாகனங்கள் மூலம் மீண்டும் சென்னை சென்றவர்கள் கோயம்பேட்டில் நோய் பரவல் அதிகரித்து மார்க்கெட்டை மூடியதும் பயந்து மிரண்டு போய் தங்கள் ஊர்களுக்கு நோய்களை சுமந்துகொண்டு வந்துள்ளனர். இந்த தகவலை கோயம்பேட்டில் இருந்து வந்த தொழிலாளர்களிடம் அதிகாரிகள் செய்த விசாரணையில் தொழிலாளர்களே கூறியுள்ளனர். எனவே இனிவரும் நாட்களில் நோய் பரவல் ஏற்படும் நபர்களை அந்தந்த ஊர்களிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அதிக நபர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால் அந்தந்த ஊர்களில் உள்ள சமுதாய நலக்கூடம் பள்ளி வளாகம் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் இன்று முதல் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் டீக்கடைகள் திறக்கலாம். ஆனால் பார்சல் டீ மட்டுமே கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது அரசு. வெளியூர்களில் இருந்து வாகனங்களில் செல்பவர்கள் டீ குடிக்க செல்லும்போது கையில் பாத்திரம் எடுத்துக் கொண்டு போக முடியுமா? இது என்ன வேடிக்கையான உத்தரவாக உள்ளது என்கிறார்கள் பொதுமக்கள்.
டாஸ்மாக் கடையை திறந்து விட்டுவிட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டது போல் உள்ளது என்கிறார்கள் வாகன ஓட்டிகள். சரி எது எப்படியோ மக்களை சகஜமான வாழ்க்கைக்கு திருப்பி விட்டுள்ளது தமிழக அரசு. இதையடுத்து கரோனாவின் பரவல் எப்படி இருக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.