![Tragedy of the young man who set himself on fire in front of the authorities in gummidipoondi](/modules/blazyloading/images/loader.png)
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணி. இவர், சிமெண்ட் கூரை அமைத்து தங்கி இருக்கும் இடத்தை செல்வந்தர் ஒருவர் தானமாகக் கொடுத்தாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணி வீட்டின் பின்புறம் புதிதாக உருவாக்கப்பட்ட வீட்டுமனையில் குடியேறிய சிலர் தங்கள் குடியிருப்புக்குச் செல்லும் பாதையில் ஆக்கிரமித்து கல்யாணி குடும்பத்தினர் வீடு கட்டி இருப்பதாகப் புகார் கொடுத்துள்ளனர். இதன் பேரில் அப்போதைய வட்டாட்சியர் கண்ணன் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்ட போது அந்த இடம் தானமாகக் கொடுத்த தனி நபர் ஒருவரின் பெயரில் பட்டா இருப்பதாகக் கூறி சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் பிரச்சனையை நீதிமன்றம் சென்று தீர்த்துக்கொள்ளுமாறு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கல்யாணிக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்யாணியின் இளைய மகன் ராஜ்குமார் அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து வீட்டை காலி செய்ய ஒரு மாதக்காலம் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், திடீரென கல்யாணியின் வீட்டிற்கு மின்வாரியம் மூலம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி காவல்துறையினரின் பாதுகாப்புடன் முன்னறிவிப்பு இன்றி வீட்டை இடிக்க ஜே.சி.பி. இயந்திரத்தை அதிகாரிகள் கொண்டுவந்ததால், மன உளைச்சலுக்கு ஆளான ராஜ்குமார், வீட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வீட்டினுள் இருந்தபடியே அதிகாரிகள் முன்னிலையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார்.
அப்போது, அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் தங்களது கையில் வைத்திருந்த தீயணைப்பான் கருவி மூலம் தீயை அணைத்தனர். 60% தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய ராஜ்குமாரை மீட்டு மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ்குமார் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உரியக் கால அவகாசம் வழங்காமல் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகள் முன்னிலையில் தீக்குளித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.