Skip to main content

சப்தரிஷி ஈசுவரர் திருக்கோயிலில் 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
300-year-old inscription found in Saptharishi Eswarar Temple

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் அமைந்துள்ள கொப்பம்பட்டி எனும் கிராமம். இவ்வூரின் பழைய பெயர் கொப்பமாபுரி ஆகும். இவ்வூரிலுள்ள சப்தரிஷி ஈஸ்வரர்-குங்குமவல்லி அம்மன் கோயிலில் பழமையான கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலகத் தமிழாராச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது;

300-year-old inscription found in Saptharishi Eswarar Temple
சு.தாமரைப்பாண்டியன்

நாயக்க மன்னர் கால கல்வெட்டு:

திருக்கோயில் சுவடித் திட்டப் பணித் தொடர்பாக கொப்பம்பட்டி சப்தரிஷி ஈஸ்வரர் கோயிலில் பழமையான சுவடிகள் இருப்பு குறித்து கள ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கோயிலில் "கொப்பமாபுரித் திருவூடல்" எனும் பழைய இலக்கிய ஓலைச் சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பதிப்பிக்கப்படாத இந்த ஓலைச்சுவடியை நூலாக்கும் பணி தற்பொழுது எனது மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நூலாக்கப் பணியின் பொருட்டு கோயில் வரலாறு திரட்டுதல் தொடர்பாக மீண்டும் கள ஆய்வு செய்யப்பட்டது. அப்பொழுது கோயிலில் இருந்த  பழமையான கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. கல்வெட்டு கோயில் கருவறையின் வெளிப்புறத்தில் வலது பக்கம் சுவரின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. அது போல அதேக் கல்வெட்டுச் செய்தி கோயிலின் நுழைவு வாயிலின் தெற்கு பகுதியிலும், தளிகை ஆற்றின் கிழக்குப் பகுதியிலும் தனிக் கல்லில் வெட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டை துறையூர் பாளையத்தின் ஜமீன்தார் நல்லப்ப ரெட்டியார் அவர்கள் கி.பி.1718 ஆம் ஆண்டு  வெட்டி வைத்துள்ளார்.

ஜமீன்தார் நல்லப்ப ரெட்டியார் வரலாறு:

கி.பி.1592- ஆம் ஆண்டு விஜயநகர பேரரசின் மதுரை பகுதிக்கு ஆளுநராக விஸ்வநாத நாயக்கர் நியமிக்கப்பட்டார். இவர் அரிய நாத முதலியாரின் உதவியுடன் பாளையக்காரர் முறையை அறிமுகம் செய்தார். தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியை 72 பாளையங்களாகப் பிரித்தார். பிற்காலத்தில் கி.பி. 1801 ஆம் ஆண்டு பாளையப்பட்டு முறை ஜமீன்தாரி முறையாக மாற்றப்பட்டது.

விஜயநகர சாம்ராஜ்யத்தின் பகுதியான "மனுகுண்டி " நகரிலிருந்து வந்த வேம ரெட்டி வம்சத்து பரம்பரையினர் துறையூர் பகுதியை ஜமீன்தார்களாக இருந்து ஆட்சி செய்து வந்துள்ளனர்.இவர்கள் 'விஜய வெங்கிடா சலபதி' எனப்பட்டம் சூட்டிக் கொண்டு துறையூரை 18 பரம்பரைக்கும் மேலாக ஆண்டு வந்துள்ளமையினை  அறிய முடிகிறது. மேலும் கி. பி. 17 ஆம் நூற்றாண்டில் துறையூர் பாளையக்காரரான வல்லக்கோல் எர்ரம ரெட்டியாரின் மகன் நல்லப்ப ரெட்டியார் பாழடைந்து கிடந்த சப்தரிஷி ஈஸ்வரர் திருக்கோயிலைப் புதுப் பித்து மறுபடியும் கட்டியுள்ளார். மேலும் சில கோயில்களை அவர் கட்டியதாகவும் வரலாறு வழி அறிய முடிகிறது.

300-year-old inscription found in Saptharishi Eswarar Temple

கல்வெட்டு தரும் நிலதானச் செய்தி:

கி.பி.1718 - ஆம் ஆண்டு வைகாசி மாதம் 13 ஆம் தியதியில் ஸ்ரீ வீர வேங்கட தேவ மகாராயர் கனகிரி நகரத்தை ஆண்டு வந்தார். அப்பொழுது திருச்சிராப்பள்ளியின் வடக்கில் அமைந்த துறையூர் சீமையில் மூலைபத்து கொப்பமா புரி சப்தரிஷி ஈஸ்வரர் - குங்கும வல்லியம்மன் திருக்கோயில் சுவாமி பூசைக்குரிய நெய்வேத்தியத்திற்கு துறையூர் பாளையக்காரர் நிலதானம் வழங்கியுள்ளார். இந்த நில தானம் வழங்கியவரின் மூதாதையரான வல்லக்கோல் நல்லப்ப ரெட்டியார் (தாத்தா) பெயர் முதலில் சுட்டப்பட்டுள்ளது. அதன் பின் ந.ஏர்ரம ரெட்டியார்  மகன் நல்லப்ப .ரெட்டியார் அவர்கள் திருக்கோயிலுக்கு நெய்வேத்தியம் பண்ண பூமிதானம் செய்தார் என்று சுட்டப்பட்டுள்ளது.

பூமி தானம் பற்றிய  விவரம் வருமாறு:

காரப்புடையாம்பட்டி எல்லைக்கு வடக்கு ; தளிகை ஆற்றுக்கு கிழக்கு, நாகய நெல்லூர் தலைக்கு தெற்கு; தம்மம்பட்டி வகைக்கு மேற்கு. இந்த எல்லைக்கு உள்பட்ட மரங்கள், கால்நடை அடைக்கும் பட்டி, தென்னந்தோப்பு, புளியந்தோப்பு , கிராமத்தின் வரி வருவாய் ஆகியவை மேற்படி கோயிலுக்கு உரியவை ஆகும். மேலும் காரப் புடையாம்பட்டியில் உள்ள ஆறும், தென்னந் தோப்புக்குக் கிழக்கில் உள்ள நஞ்சையில் 6 செய் நிலமும் (10.5 ஏக்கர் நிலம்) கோயிலுக்குப் பூமி தானமாக ஜமீன்தார் நல்லப்ப ரெட்டியார் வழங்கியுள்ளார் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளதாகப் பேராசிரியர் சு. தாமரைப்பாண்டியன் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

5 டன் செப்பேட்டில் பன்னிருத் திருமுறை புத்தகத்தில் மூலவர்; ரூ.10 கோடியில் உருவாகும் செப்பேட்டுக் கோயில்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Sempet Temple will be built at Rs. 10 crores

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தில் உள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்க கிராமம் கொடும்பாளூர். பழைய வரலாற்றுக் காலத்தில் தொடர்புடைய பொத்தப்பட்டி கிராமத்தில் விருத்தாச்சலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளை சார்பில் ரூ.10 கோடி மதிப்பில் "பன்னிருத் திருமுறை செப்பேட்டுத் திருக்கோயில்" கருங்கல்லால் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோயில் செப்பேட்டுத் திருக்கோயில் என்று கூறப்படுவதால் அதனைப் பற்றி அறிய பொத்தப்பட்டி கிராமத்தில் கோயில் திருப்பணிகள் நடக்கும் இடத்திற்குச் சென்றோம்.

Sempet Temple will be built at Rs. 10 crores

திருப்பணிகளைக் கண்காணித்து வரும் அறக்கட்டளை நிறுவனர் அ.சங்கரய்யா நம்மிடம், “விருத்தாச்சலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளை சார்பில் நாயன்மார்களுக்கு கோயில்கள் கட்டி எழுப்பி வருகிறோம். அந்த வகையில் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் 12 திருமுறைகளுக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் கோயில் கட்ட முடிவெடுத்து பொத்தப்பட்டி கிராமத்தில் நிலம் வாங்கி கருங்கல்லால் கோயில் கட்டி வருகிறோம். இதில் திருமுறைகளுக்கு உதவிய மன்னர் ராஜராஜசோழன் காளிங்கராயர், பாடியவர் சிலைகளும், திருமுறைகளும் வடிக்கப்படுவதுடன் திருப்பணிக்கு உதவியோர்களின் சிலைகளும் வடிக்கப்படுகிறது. எங்கே பார்த்தாலும் நம் பழைய இசைக்கருவிகள் புடைப்புச் சிற்பங்களும், திருமுறை வாசகங்களும் இடம் பெறுகிறது.

Sempet Temple will be built at Rs. 10 crores

அதைவிட சிறப்பு கோயில் கருவறையில் இதுவரை சிலைகள் வைக்கப்படும். ஆனால் இங்கே 12 திருமுறைகளையும் 5 டன் செம்பு பட்டயத்தில் திருமுறைப் பாடல்களை அச்சிட்டு 165 புத்தகங்களாக்கி கருவறையில் லிங்கம் வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு லிங்கம் போன்ற அமைப்பில் கவசம் அணிவிக்கப்பட உள்ளது. இந்தச் செம்பு திருமுறைப் புத்தகங்களை ஆனி திருமஞ்சனம், ஆருத்ர தரிசனம் ஆகிய இரு நாட்களில் மட்டும் வெளியில் எடுத்து படிக்க கொடுக்கப்படும். ஒவ்வொரு புத்தகத்தையும் படிக்க 165 இருக்கைகள் அமைக்கப்பட்டு ஒரே நேரத்தில் 165 பேரும் பாட நிரந்தர மண்டபமும் தயாராகிறது. இதே ஊரில் செப்பு பட்டயத்தில் திருமுறை பாடல்கள் அச்சாக்கப்பணிகளும் நடந்து வருகிறது.

உலகிலேயே பன்னிருத் திருமுறை செப்புப் புத்தகத்தால் ஆன கோயில் இது மட்டுமே இருக்கும். இந்தக் கோயிலும் வரலாற்றில் பேசப்படும். இதற்கான திருப்பணி நன்கொடைகள் கிடைத்தால் இன்னும் விரைவாக பணிகள் முடிந்து திருக்குட நனனீராட்டு பெருவிழா நடத்திவிடலாம்" என்றார். திருமுறை புத்தகங்களே மூலவராக இருப்பது தமிழுக்கே உரிய சிறப்பு என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

Next Story

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி; கண்ணிமைக்கும் நேரத்தில் கைவரிசை காட்டிய பெண்கள் 

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
 women who stole during the work of counting the Tiruttani temple bill offering

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-படை திருக்கோயிலாகும். இந்தத் திருக்கோயிலுக்கு பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக பணம், நகை ஆகியவற்றை செலுத்தியுள்ளனர். இதனை எண்ணுவதற்கு   திருக்கோயிலில் பொறுப்பு அதிகாரி இணை ஆணையர் அருணாசலம் முன்னிலையில் 150க்கும் மேற்பட்ட திருக்கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள், திருக்கோயில் தற்காலிக பணியாளர்கள்,   ஆகியோர்கள் மலைக்கோவில் வசந்த மண்டபத்தில் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய இந்தப் பணியில் காலை 9.30 மணிக்கு இரண்டு பெண் பணியாளர்கள் திருக்கோயில் உண்டியல் பணம் எண்ணும் பொழுது அந்தப் பணத்தை எடுத்து மறைப்பது போல் சி.சி.டி.வி கட்சியில் பதிவாகியுள்ளது. இதனைத் திருக்கோயில் அதிகாரிகள் கவனித்து அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் திருடியதை உறுதி செய்துள்ளனர்.  உடனடியாக   திருத்தணி காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த திருத்தணி போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருத்தணி முருகன் கோயிலில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் வைஜெயந்தியிடமும்,  திருக்கோயிலில் நாதஸ்வரம் வாசிக்கும் நிரந்தர பணியாளர் தேன்மொழியிடமும் விசாரணை நடத்தினர்.  

இருவரும் உண்டியல் பணம் எண்ணும்ம் பொழுது திருடிய பணத்தை வைஜெயந்தியுடன் சேர்ந்து மலைக்கோவில் கழிவறைக்கு சென்று தங்களது உள்ளாடையில் மறைத்து வைத்துள்ளதை உறுதி செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். பின்னர் இந்த இரண்டு பெண் பணியாளர்களிடமிருந்தும் ரூபாய் 1,15790 லட்சம் பணம் பறிமுதல் செய்துள்ளனர்.  இந்தச் சம்பவம் திருத்தணி முருகன் கோயில் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் எத்தனை நாள் இது போல் உண்டியல் பணம் என்னும் போது திருடி உள்ளனர் என்றும் திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.