Skip to main content

சிறப்பாக நடந்த சமயபுரம் கும்பாபிஷேகம் - அலட்சியம் காட்டிய அரசு அதிகாரிகள்!

Published on 06/07/2022 | Edited on 06/07/2022

 

Samayapuram Temple went well amid criticism!

 

தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோயில்களில் ஒன்று திருச்சி சமயபுரம் கோயில். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் இந்தக் கோயிலில் வழிபாடு நடத்துவர். இந்த சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 அடி உயரத்தில் 7 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த ராஜகோபுரம் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாரை சேர்ந்த இரட்டை சகோதரர்களான பொன்னர் சங்கர் மூலமாக திருப்பணி செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கோபுரத்திற்கு இன்று கும்பாபிஷேக விழா நடந்தது. 

 

இந்தக் கும்பாபிஷேக விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். காலை 6.55-ல் இருந்து 7.15 வரை சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டார். இதில் கலந்துகொண்ட பக்தர்கள், இன்னும் சில விஷயங்களை சிறப்பாக செயல்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும், கும்பாபிஷேக விழாவில் சில குளறுபடிகளும் நடந்தன. 

 

Samayapuram Temple went well amid criticism!

 

இந்த ராஜகோபுரம் திருப்பணி மேற்கொண்ட முக்கிய பங்குதாரர்களான பொன்னர், சங்கர் என்பவர்களுக்கும், சமயபுரம் கோயில் இணை ஆணையரான கல்யாணிக்கும் ஏற்கனவே கருத்து முரண்பாடுகள் இருந்ததால் இரு தரப்பினருக்கும் ஒத்துப் போகாத நிலை இருந்து வந்துள்ளது. பொன்னர் மற்றும் சங்கர் மீது கடந்த அதிமுக ஆட்சியில் மணல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், இவர்கள் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் பினாமிகள் எனவும் குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள். 

 

ஆனால், தற்போது பொன்னர், சங்கர் மற்றும் கோயில் இணை ஆணையர் கல்யாணிக்கும் பழைய பகைகள் குறைந்து சுமுகமான நிலை உருவானதால் மூவரும் இணைந்து இந்த கும்பாபிஷேகத்தை வழிநடத்தினர். கும்பாபிஷேக விழாவை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப சேட்டிலைட் சேனல்களுக்கு கோபுரத்தின் மேலே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதேசமயம், திருச்சியில் உள்ள ஒரு உள்ளூர் தொலைக்காட்சிக்கு மட்டும் கோபுரத்தின் மேல் செல்ல அனுமதி வழங்கப்பட்டதும் விமர்சனத்துக்குள்ளானது. இதன் பின்னணி குறித்து விசாரித்ததில் உள்ளூர் தொலைக்காட்சியின் உரிமையாளர், கோவில் இணைய ஆணையர் கல்யாணிக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்பதால் அவருக்கு மட்டும் அனுமதி வழங்கி மற்ற தொலைக்காட்சிகளை கோபுரத்தின் மேல் செல்ல அனுமதிக்காமல் தவிர்த்து உள்ளார் எனக் கூறப்படுகிறது. 

 

tt

 

இது ஒரு புறம் இருக்க, காவல்துறையும் சரியான பாதுகாப்பு கொடுக்காததால் மக்கள் அவதியுற்றனர் என கும்பாபிஷேக விழாவுக்கு வந்த பக்தர்கள் தெரிவித்தனர்.  அதற்கேற்றார்போல், அதிகாலை 3.30 மணி அளவில் அனைத்து கதவுகளும் பூட்டப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேரம் கடந்தும் கதவுகள் திறக்கப்பட்டிருந்தன. அதேபோல், அமைச்சர் வருகையின் போது போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததால் கோயிலுக்குள் கூட்டம் அதிகமாகியது. இதனை காவல்துறையினர் மிகுந்த சிரமப்பட்டு கட்டுப்படுத்தினர். 


பொதுவாக கோயிலுக்குள் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள முக்கியஸ்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அனுமதி சீட்டு வழங்கப்படும். ஆனால், இன்று சமயபுரம் கோயிலில் சீமான் நடராஜன், வ.உ.சி கண்ணன், ஈஸ்வரன் ஆகிய மூன்று பேர் அந்த அனுமதி சீட்டுகளை வழங்கி உள்ளனர். இதனால், கோயில் பணியாளர்களுக்கு கூட உரிய அனுமதிச்சீட்டு வழங்கப்படவில்லை எனும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், சமயபுரம் கோயிலின் முழு அதிகாரமும் இந்த மூன்று பேர் கையில் உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பான விளக்கத்தைப் பெற கோயில் இணை ஆணையர் கல்யாணியைத் தொடர்புகொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. அவர் தரப்பு விளக்கம் தரப்பட்டால் அதுவும் வெளியிடப்படும். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.