Skip to main content

சேலம் மாநகராட்சி: வசூலாகாத பல கோடி ரூபாய்; தணிக்கை பணிகள் தொடக்கம்... கலக்கத்தில் ஊழியர்கள்! 

Published on 31/05/2022 | Edited on 31/05/2022

 

Salem Corporation: crores of rupees not collected; Audit work begins

 

சேலம் மாநகராட்சிக்கு பல ஆண்டுகளாக வசூலாகாத குத்தகை பாக்கித் தொகை குறித்த தணிக்கை பணிகள் தொடங்கியுள்ள நிலையில், ஓய்வு பெறும் நிலையில் உள்ள வரித்தண்டலர்கள், ஆர்.ஐக்கள், ஏ.ஆர்.ஓக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 


சேலம் மாநகராட்சியில் 60 கோட்டங்கள் உள்ளன. இவை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி என நான்கு மண்டலங்களாக பிரித்து நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. தூய்மைப் பணியாளர்கள், அம்மா உணவக ஊழியர்கள், கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் ஆகிய பிரிவில் 2750 பணியாளர்கள் உள்பட, முதன்மை அலுவலகம், மண்டல அலுவலகங்களில் வரித்தண்டலர்கள், ஆர்.ஐ, ஏ.ஆர்.ஓ, பொறியாளர்கள், அலுவலக பணியாளர்கள், சிப்பந்திகள் என மொத்தம் 4000 பேர் பணியாற்றி வருகின்றனர். 


பணியாளர்களின் ஊதியத்திற்காக மட்டுமே மாதத்திற்கு 11 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டாகவே மாநகராட்சிக்கு வர வேண்டிய வருவாய் இனங்கள் சரியாக வசூலாகாததாலும், எதிர்பார்த்த அளவுக்கு குத்தகை இனங்கள் விலை போகாதது, அப்படியே பெரிய அளவில் குத்தகை போனாலும், ஏலத்தொகை வசூல் ஆகாதது உள்ளிட்ட காரணங்களால் கடும் நிதி நெருக்கடியில் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.
 

மேலும், உலக வங்கிக்கடனுக்கான வட்டி மட்டுமே ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய நிலை உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சொத்துவரி, குடிநீர் கட்டணம், வாடகை உள்ளிட்ட அனைத்து இனங்கள் மூலம் ஆண்டுக்கு 75 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் தாண்டாது என்கிறார்கள். அதாவது, செலவுக்கேற்ற வகையில் வருவாய் இல்லை என்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் மாநகராட்சிக்குச் சொந்தமான நாளங்காடிகள், காய்கறி கடைகள், பாதையோர கடைகள், பூ மார்க்கெட், இறைச்சி அறுவைக் கூடங்கள், வாகன நிறுத்தக் கூடங்கள் ஆகியவற்றை ஏலம் எடுத்தவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் வசூலாகாமல் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. 


இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஊழியர்கள் நம்மிடம் பேசினர், ''மாநகராட்சிக்குச் சொந்தமான வாகன நிறுத்தக்கூடங்கள், தினசரி மார்க்கெட்டுகள், பூ மார்க்கெட் உள்ளிட்ட இனங்களை பெரும்பாலும் திமுக, அதிமுக பிரமுகர்கள்தான் பினாமிகள் பெயரில் ஏலம் எடுத்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே குத்தகைதாரர்கள், ஒரு நூதன உத்தியைப் பின்பற்றுகின்றனர். குத்தகை எடுக்கும் ஒப்பந்ததாரர்கள், கடைக்காரர்களிடம் வாடகை மற்றும் தண்டல் வசூலித்து விடுகின்றனர். பின்னர் அவர்கள், தாங்கள் ஏலம் எடுத்த இனத்தில் இருந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்று,  ஏதாவது சாக்குபோக்கு சொல்லி நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று விடுகின்றனர். 


குத்தகைதாரர்களிடம் மாநகராட்சி ஊழியர்கள் கையூட்டு பெற்றுக்கொண்டு, அவர்களே இப்படியான யோசனைகளைச் சொல்லி, நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேர்மன் ராமலிங்கம் நாளங்காடியை ஏலம் எடுத்த அதிமுக பிரமுகர் சுதாகர், 40 லட்சம் ரூபாய் குத்தகை பாக்கி வைத்திருக்கிறார். அவர் வழங்கிய இரண்டு காசோலைகளும் வசூலாகாமல் திரும்பி வந்துவிட்டன. அவரிடம் பாக்கியை வசூலிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஆர்.ஐ சண்முகம், குத்தகை விடப்பட்டபோது பொறுப்பில் இருந்த ஏ.ஆர்.ஓ பார்த்தசாரதி, அதன்பிறகு அந்தப் பணியிடத்திற்கு வந்த ஏ.ஆர்.ஓ செந்தில்முரளி ஆகியோர் பாக்கியை வசூலிக்க ஆர்வம் காட்டவில்லை. அதற்கான பின்னணி காரணம் என்னவென்றும் தெரியவில்லை. 


ஒரு சிலரின் அலட்சியத்தால் மாநகராட்சிக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் ஊழியர்களுக்கு குறித்த நேரத்தில் சம்பளம் வழங்க முடியாத நிலை தொடர்கிறது. வரி மற்றும் வரி அல்லாத இனங்களுக்கு வசூலிக்கப்படும் காசோலைகள் பல ஆண்டுகளாக ரொக்கமாக்கப் படாமல், வங்கியில் இருந்து மாநகராட்சி காசாளர் வசமே திரும்பப் பெறப்பட்டு வரும் நிலை உள்ளது. 


தற்போது கணினிமயமாக்கப்பட்டுள்ள நிலையில், யு.டி.ஐ.எஸ் எனப்படும் மாநகராட்சி வலைதளத்தில் ஒவ்வொரு குத்தகைதாரரும் செலுத்த வேண்டிய பாக்கி தொகை விவரமும் உள்ளீடு செய்யப்பட வேண்டும். ஆனால், ஊழியர்கள் சிலர் திட்டமிட்டே குத்தகைதாரர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, அவர்களின் முந்தைய ஆண்டின் பாக்கி விவரங்களை யு.டி.ஐ.எஸ் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதில்லை. அதாவது, குத்தகைதாரர்களின் நிலுவைத்தொகை ஏதேனும் இருப்பின், அதை வெளிப்படையாக காட்டாமல் நடப்பு ஆண்டிற்குரிய கேட்பு விவரம் மட்டுமே சுட்டிக் காட்டப்படுகிறது. இதனால் குத்தகை பாக்கித்தொகை வசூலாகாமல் பேரிழப்பை ஏற்படுத்துகிறது'' என்கிறார்கள் ஊழியர்கள். 


இதுகுறித்து சேலம் மாநகராட்சி உயர் அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ''மாநகராட்சி குத்தகை இனங்களை ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் இதுவரை செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரி வசூல் மற்றும் குத்தகை பாக்கியை வசூலிப்பதில் மெத்தனமாக செயல்பட்ட பில் கலெக்டர்கள், ஏ.ஆர்.ஓக்கள் உள்ளிட்டோர்தான் பாக்கித்தொகையை வசூலிப்பதில் முழு பொறுப்பேற்க வேண்டும். சூரமங்கலம் மண்டலம் சேர்மன் ராமலிங்கம் நாளங்காடி குத்தகை தொகை நிலுவை வசூலாகாமல் உள்ளது குறித்து ஆர்.ஐ சண்முகத்திடம் விசாரணை நடத்தப்படும். இது தொடர்பாக சூரமங்கலம் மண்டலத்தில் தணிக்கை பணிகளும் நடந்து வருகின்றன'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.