
சிவகங்கையில் தனியார் பேருந்தில் திடீரென இன்ஜின் பக்கத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை, சிவகங்கை, காளையார்கோவில் வழியாக இளையான்குடி நோக்கி எம்ஆர்டி என்ற தனியார் பேருந்து தினசரி சேவை வழங்கி வருகிறது. இன்று முத்துக்குமரன் என்பவர் பேருந்தை ஓட்டி வந்த நிலையில் பாலமுருகன் என்பவர் நடத்துநராக இருந்துள்ளார். காலை நேரம் என்பதால் பள்ளி மாணவகள், வேலைக்கு செல்வோர் என கூட்டம் அதிகமாக இருந்தது. வழக்கம்போல் சிவகங்கை அருகே பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மேம்பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது திடீரென பேருந்தின் முன் பக்கமான இன்ஜின் பகுதியில் புகை வெளிப்பட்டது.
உடனடியாக ஓட்டுநர் முத்துக்குமார் பேருந்தை கவனத்துடன் பாலத்தின் ஓரத்தில் பேருந்து நிறுத்திவிட்டு பயணிகளை அவசரமாக கீழே இறங்கச் சொன்னார். உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஓட்டுநரும் நடத்துநரும் சாமர்த்தியமாக செயல்படுத்தல் பயணிகள் அனைவரும் பத்திரமாக உயிர்தப்பிய இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.