Skip to main content

கிராமத்தில் எம்.எல்.ஏ கட்டிய பிரமாண்ட திமுக அலுவலகம்; திறந்து வைக்கும் முதல்வர்!

Published on 18/06/2025 | Edited on 18/06/2025

 

 MLA built a huge DMK office in the village vellore

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 1988ல் சென்னை அண்ணாசாலையில் பிரமாண்டமான முறையில் கலைஞரால் கட்டப்பட்டது அண்ணா அறிவாலயம். அதற்கு முன்பு அன்பகம் கட்டப்பட்டு தற்போது திமுக இளைஞரணி அலுவலகமாக இருந்தாலும் அறிவாலயம் தான் திமுக தொண்டர்களை பொருத்தவரை கோவிலுக்கு நிகரானது. சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி, விழுப்புரம் மாநகரங்களில் திமுகவுக்கு என கலைஞர் அறிவாலயம் என்கிற பெயரில் கட்சி அலுவலகங்கள் கட்டப்பட்டு திமுக தலைமை வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அலுவலகங்களில் திமுக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

திமுக தொடங்கியது முதல் இன்றுவரை திமுகவின் கோட்டை என்றால் அது வடாற்காடு மாவட்டங்கள்தான். 40 வருடங்களுக்கு முன்பு வேலூர், திருவண்ணாமலை, போளுர், களம்பூர் பகுதிகளில் திமுகவுக்காக கட்சி அலுவலகங்கள் சிறிய அளவில் கட்டப்பட்டு இப்போதும் இயங்கி வருகிறது. சிறிய அளவில் கட்டப்பட்ட அந்த கட்டிடத்தின் தினசரி செலவுகளை பார்த்துக்கொள்ள கட்டிடத்தின் ஒருப்பகுதியில் கடைகள் கட்டப்பட்டு வாடகையும் விடப்பட்டு அதில் வரும் வருமானத்தை வைத்து கட்சி அலுவலகத்தை நடத்தி வரும் வகையில் கட்சி பெயரில் எழுதி வைத்தனர். அப்போதைய நிர்வாகிகள். அக்கட்சி அலுவலகங்கள் இப்போதும் இயங்கி வருகின்றன.

வடமாவட்டங்களில் விழுப்புரத்தில் மட்டும் கலைஞர் அறிவாலயம் உள்ளது. வடாற்காடு மாவட்டமாக இருந்து தற்போது பிரிந்து நான்கு மாவட்டமாக உள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் திருச்சி, விழுப்புரத்தில் இருப்பதுபோல் திமுகவுக்கு என அறிவாலயம் இல்லை. தொடக்கக்காலத்தில் வடமாவட்டங்களின் பெரும் சக்தியாக ப.உ.சண்முகம் இருந்தார். தற்போது திமுகவின் கட்சி நிர்வாகத்தில் இரண்டாம் இடமான பொதுச்செயலாளர் பதவியில் துரைமுருகன் இருந்து வருகிறார். அதிகாரம் பொருந்திய திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் இருந்து வருகிறார். அவரின் மாவட்டத்தில் இதுவரை திமுகவுக்கு என மாவட்ட அலுவலகம் இல்லை. மா.செவாக வருபவர்கள் கட்சி அலுவலகம் அமைக்கிறார்கள் தாங்கள் பதவியில் இருந்து விலகியதும் அந்த அலுவலகத்தை மூடிவிடுகிறார்கள்.

 MLA built a huge DMK office in the village vellore

தமிழ்நாட்டில் 2 சதவீத ஓட்டுக்களை வாங்கமுடியாத பாஜக கூட மாவட்டந்தோறும் கட்சிக்கென அலுவலகத்தை புதியதாக சொந்தமாக கட்டி திறந்து வருகிறது. 75 ஆண்டுக்காலம் கடந்த நமது கட்சிக்கு இக்காலத்துக்கு ஏற்றாற்போல் கட்சி அலுவலகம் நமக்கு இல்லையே என்கிற ஏக்கம் ஒவ்வொரு மாவட்ட திமுக தொண்டர்களிடையே இருந்து வருகிறது. அந்த கவலையை போக்கும் வகையில் தற்போதைய வேலூர் மா.செ நந்தகுமார், வேலூர் மாநகரில் கட்சிக்கான அறிவாலயம் என்கிற பெயரில் கட்சி அலுவலகம் கட்ட முடிவு செய்தார். அதற்கு சில நிர்வாகிகளின் ஆதரவு கிடைக்காததால் என்ன செய்வது என யோசித்தவர் அதிரடியாக ஒருமுடிவு செய்தார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் நந்தகுமார். தனது அணைக்கட்டு தொகுதியில் அணைக்கட்டு என்கிற வளர்ந்த கிராமத்தில் 1,500 சதுர அடி பரப்பளவில், 1500 பேர் அமரும் வகையில் ரகசியமாக கலைஞர் அறிவாலயம் கட்டியுள்ளார். இது அணைக்கட்டு ஒன்றியத்திலுள்ள கட்சி நிர்வாகிகள் ஒரு சிலரைத் தவிர வேறு யாருக்கும் பெரியதாக தெரியாது. இடம் வாங்கி கட்சி பொதுச்செயலாளர் பெயரில் எழுதி வைக்கப்பட்டுள்ளது, அந்த இடத்தில் சுமார் 1.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அந்த கலைஞர் அறிவாலயத்தை வரும் ஜீன் 25ஆம் தேதி வேலூர் மாவட்டத்துக்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அணைக்கட்டுக்கு நேரில் வந்து திறந்து வைக்கிறார். அலுவலகத்தின் முன்பு 9 அடி உயரத்தில் கலைஞரின் வெண்கலை சிலையும் அமைக்கப்பட்டு அதுவும் அன்றைய தினமே திறந்துவைக்கப்படுகிறது.

 MLA built a huge DMK office in the village vellore

இதுகுறித்து நம்மிடம் பேசிய எம்.எல்.ஏ நந்தகுமார், இது கட்சி அலுவலகமாக மட்டுமல்லாமல் கோரிக்கையோடு வரும் பொதுமக்களுக்கு உதவி செய்யும் இடமாகவும், பள்ளி - கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டும் மையமாகவும் இருக்கும்.  வேலூரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் 2019 முதல் ஆதரவற்ற, ஏழை, எளிய மக்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கப்படுகிறது. அதுபோன்று இங்கும் செய்யலாமா என ஆலோசிக்கப்படுகிறது. அடுத்து 2026ல் திமுக ஆட்சி அமைந்ததும் வேலூரில் பிரமாண்டமாக கலைஞர் அறிவாலயம் கட்டப்படும் என்றார்.

சார்ந்த செய்திகள்