Skip to main content

இறந்தவரின் உடலை புதைக்க எதிர்ப்பு...வேலூரில் மீண்டும் ஒரு சாதிய பிரச்சனை.

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரியை சேர்ந்தவர் 70 வயதை கடந்த மூதாட்டி கங்கம்மாள். இவர் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் செப்டம்பர் 4ந்தேதி இறந்துள்ளார். இவரை அந்த கிராமத்துக்கு உட்பட்ட சுடுக்காட்டில் அடக்கம் செய்ய முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளில், அவரது குடும்பத்தார் இறங்கியுள்ளனர்.


மற்றொரு சாதியினரின் உடல் எங்கள் சமூக சுடுக்காட்டில் அடக்கம் செய்யக்கூடாது என அக்கிராமத்தில் உள்ள சிறுபான்மையின சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். இதனால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இறந்தவரின் மகன் சி.பி.எம் கட்சியின் வாணியம்பாடி தாலுக்கா குழு உறுப்பினராக உள்ளார். இதனால் கங்கம்மாள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


அதன்அடிப்படையில் அந்த கிராமத்துக்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், சுடுகாட்டை விட மறுப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் நாங்கள் விட முடியாது எனச்சொன்னதாக தெரிகிறது. மயானம் என்பது பொதுவானாது. இங்கு இன்னார் தான் அடக்கம் செய்ய வேண்டும் என சட்டத்தில் கிடையாது. அதனால் அமைதியாக இருங்கள், அடக்கம் நடைபெறும். நீங்கள் எதிர்த்தால் கைது செய்யப்படுவீர்கள், தீண்டாமை வழக்கு போடப்படும் எனச்சொன்னதாக தெரிகிறது.

Resistance to bury the body of the deceased again a caste problem in Vellore

எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் வெகு சிலர் தான். அவர்கள் தான் சாதி பிரச்சனையை உருவாக்கியுள்ளார்கள். அதற்கு காரணம் சுடுகாட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலம் வைத்திருப்பவர்கள், சுடுகாட்டையும் ஆக்கிரமித்துள்ளதாக தெரிகிறது. அந்த ஆக்கிரமிப்பு நில ஆசையில் தான் தூண்டிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


கங்கம்மாள் உடலை  அடக்கம் செய்ய சுடுகாட்டில் குழிவெட்டும் பணியில் அதற்கானவர்கள் ஈடுப்பட்டுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அதிகாரிகள் அங்கு உள்ளதால் அந்த கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது.


ஏற்கனவே சுடுகாட்டுக்கு வழிவிடவில்லை எனச்சொல்லி பாலத்தில் இருந்து உடலை இறக்கிய விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறது மாவட்ட நிர்வாகம். அடுத்து இன்னொரு பிரச்சனையா என அதிர்ச்சியான கலெக்டர் சண்முகசுந்தரம், உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட, தடுப்பவர்களை பணிய வைத்துள்ளது என்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்