
ஒரு நகரத்தில், திடீரென அந்த நகரத்தின் போலீசார் அணிவகுப்பு நடத்தினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் 18 ஆம் தேதி மதியம் கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் கரூர் நகரத்தில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில், சுமார் 400 போலீசார் கலந்து கொண்டனர்.
கரூரின் மையப்பகுதியான ஜவகர் பஜார், ஹாஸ்பிட்டல் ரோடு, கோவை ரோடு என முக்கிய வீதிகளில் போலீசார் அணிவகுத்து வந்தனர். எதற்காக இந்த அணிவகுப்பு என மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த அணிவகுப்பை முன்னின்று நடத்திய மாவட்ட எஸ்.பி பகலவன் கூறும்போது, "கரூர் மாவட்டத்தில் கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களின் மீது கடுமையாக நடவடிக்கை எடுப்போம். அதேபோல் சட்டம் ஒழுங்குக்கு ஊறு விளைவிப்போர் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுப்போம்" எனக் கூறினார்.
கரூர் மாவட்டம், முக்கிய அமைச்சரான போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதி. இங்கு சட்டவிரோதச் செயல்கள் நடக்கிறது என போலீசே சொல்லாமல் சொல்லி உள்ளதோ என மக்கள் மத்தியில் கேள்வி எழுகிறது.