Skip to main content

ஆன்லைன் வர்த்தகத்தால் வெள்ளி தொழில் பாதிப்பு! மக்களவையில் எம்.பி. பார்த்திபன் பேச்சு!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தால் வெள்ளி கொலுசு உற்பத்தித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன் மக்களவையில் பேசினார்.


சேலத்தின் பாரம்பரிய தொழில்களுள் ஒன்றாக வெள்ளி கொலுசு உற்பத்தித் தொழிலைச் சொல்லலாம். பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதுபோல திருமணம் முடித்துக் கொடுக்கும் பெண்ணை தங்கத்தால் அலங்கரித்துப் பார்க்க முடியாத ஏழைகள்கூட, காலில் வெள்ளி கொலுசு அணியவைத்து அனுப்புவர். அந்தளவுக்கு, வெள்ளி ஆபரணம் தமிழர் பாரம்பரியத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.


சேலத்தைப் பொருத்தவரை, செவ்வாய்ப்பேட்டை பகுதிதான் வெள்ளியால் ஆன கொலுசு, அரைஞாண் கயிறு, மெட்டி, கைகாப்பு உள்ளிட்ட ஆபரணங்களை தயாரிப்பதில் முக்கிய கேந்திரமாக விளங்குகிறது. ஒரு காலத்தில் செவ்வாய்ப்பேட்டையில் வெள்ளித் தொழில் கற்றுக்கொண்ட தொழிலாளர்கள்தான் இன்றைக்கு சிவதாபுரம், பனங்காடு, பழைய சூரமங்கலம், குகை, பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளிலேயே பட்டறையாக வைத்து கொலுசு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

onilne market silver business lok sabha speech sr parthiban gst


மாவட்டம் முழுவதும் சிறியதும், பெரியதுமாக கிட்டத்தட்ட பத்தாயிரம் வெள்ளிப்பட்டறைகள் இயங்கி வருவதாகச் சொல்கிறார்கள் வெள்ளி கொலுசு தயாரிப்பாளர்கள். எல்லாமே குடிசைத் தொழிலாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால்தான் கடந்த 1982ம் ஆண்டு முதல் இத்தொழிலுக்கு முற்றிலும் வரிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், நடுவண் பாஜக அரசு வெள்ளி மீது விதித்த 3 சதவீத ஜிஎஸ்டி வரியால், இத்தொழிலை பெரிய அளவில் ஆட்டம் காண வைத்திருக்கிறது என்று குமுறுகிறார்கள்.


அத்தோடு, ஆன்லைன் சந்தையில் எவ்வித கட்டுப்பாடுமின்றி வெள்ளியும் வர்த்தகம் செய்யப்படுவதால், மத்தளத்திற்கு இருபக்கமும் அடி என்பதுபோல், இத்தொழிலை ரொம்பவே புரட்டிப் போட்டிருக்கிறது. அதனால் மூன்று லட்சம் பேர் வேலை செய்து வந்த இத்தொழிலில் இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையின்றித் தவிக்கின்றனர். இந்த நிலையில்தான், ஜிஎஸ்டியில் வரிவிலக்கு மற்றும் ஆன்லைன் வெள்ளி வர்த்தகத்தை தடை செய்யக்கோரி, சேலம் எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன் மக்களவையில் புதன்கிழமை (டிச. 11, 2019) குரல் கொடுத்திருக்கிறார்.


மக்களவையில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. பேசியதாவது:


சேலம் மாவட்டத்தில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெள்ளி கொலுசு உற்பத்தி செய்வதை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக குடிசைத் தொழில் போல மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் வெள்ளி கொலுசுகள், நாட்டில் உள்ள பல மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இந்த தொழிலில் ஆண்கள், குடும்பத் தலைவிகள் மற்றும் வேலையில்லாத பலர் நேரடியாக ஈடுபட்டு உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் இத்தொழிலை நம்பியே இருக்கிறது. சேலம் வெள்ளி தொழில் மூலம் ஆண்டுக்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது. சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வெள்ளி கொலுசு மூலம் கிடைக்கும் வருவாயும் முக்கிய பங்கு வகிக்கிறது.


இதற்கு முன்பு, வெள்ளித்தொழிலுக்கு எந்தவித வரியும் விதிக்கப்படவில்லை. அண்மைக் காலமாக, ஆன்லைன் வர்த்தகத்தில் வெள்ளி வியாபாரம் வந்ததால், இந்த தொழில் நலிவடைந்து வருகிறது. ஆன்லைன் வர்த்தகத்தால் வெள்ளி விலையில் நிலையற்ற தன்மை ஏற்படுகிறது. 


மத்திய அரசு வெள்ளி தொழிலுக்கு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதால், தொழில் மேலும் நசிவடைந்துள்ளதோடு, பலர் வேலைவாய்ப்பையும் இழந்துள்ளனர். எனவே, மத்திய அரசு குடிசைத் தொழிலாக செய்யப்பட்டு வரும் வெள்ளி கொலுசு தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை முற்றிலும் நீக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து வெள்ளி வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும்.  இவ்வாறு, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி பேசினார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arvind Kejriwal enforcement department extension

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆம் ஆத்மி கட்சியினர் அங்கு போராட்டம் நடத்தினர். பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே அதிரடி விரைவுப் படையினர் (R.A.F.) குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை என 7 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் விதித்து செல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் முடிந்து கெஜ்ரிவால் டெல்லி  ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (28.03.2024) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவால் காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரியது. அதற்கு நாங்கள் விரும்பும் வரை அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இத்தகைய சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.