Skip to main content

மதுரையில் ‘அரசியல் பேசும்’ சுவரொட்டிகள்! -குமுறலை வெளிப்படுத்தும் மு.க.அழகிரி விசுவாசிகள்!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

ஜனவரி 30, மு.க.அழகிரி பிறந்த நாள். தென் மாவட்டங்களில் அவரது விசுவாசிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டாலும், மதுரையில் மு.க.அழகிரியை வாழ்த்தும் பிறந்தநாள் போஸ்டர்களுக்குப் பஞ்சமில்லை. எங்கும் காண முடிகிறது.

வாழ்த்து போஸ்டர் என்றாலும், அவரது ஆதரவாளர்கள், தங்களின் விசுவாசம், நம்பிக்கை, ஆதங்கம், வருத்தம் என அனைத்தையும் ஏதோ ஒருவகையில் வெளிப்படுத்தி விடுகின்றனர். போஸ்டர் வாசகம் குறித்து கேட்டால், பக்கம் பக்கமாக அவர்களால் வசனம் பேசமுடிகிறது. அவர்களின் கருத்துக்களைச் சுருக்கமாக இங்கே தொகுத்துள்ளோம்.  

 

Number of posters talking in Madurai!...


‘கழகத்தைக் காக்க வா! தமிழகத்தை மீட்க வா! தலைவா!’ என்று வாழ்த்தினால் என்ன அர்த்தம்?  “தற்போது பாதுகாப்பற்ற நிலையில் கழகம் உள்ளது. ஒரு தலைவனாக இருந்து தமிழகத்தை மீட்க அண்ணனால்தான் முடியும்.”  

 

Number of posters talking in Madurai!...


‘எதையும் தாங்கும் இதயம் – அறிஞர் அண்ணா. இதையும் தாங்கும் இமயம் நீயே அண்ணா!’ என்றால்,  “அண்ணா என்றால் அறிஞர் அண்ணாவைத்தான் குறிக்கும். அவருக்குப் பிறகு, ‘அ’னா என்றாலோ, அண்ணன் என்றாலோ, அது மு.க.அழகிரியின் அடையாளம் ஆனது. இதையும் தாங்கும் இமயம் என்பதற்கெல்லாம் அர்த்தம் சொல்லத்தான் வேண்டுமா? அவர் யாரால் எந்த அளவுக்கு நோகடிக்கப்பட்டார் என்பது யாருக்குத்தான் தெரியாது. ஆனாலும், அமைதி காத்து வருகிறாரே!”

 

Number of posters talking in Madurai!...


‘அஞ்சா நெஞ்சரே! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்.. உன்தன்னோடு உற்றோமே யாவோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம்!’   “திருப்பாவை வரிகள் இவை! ஏழேழு பிறவி எடுத்தாலும், அண்ணன் ஒருவருக்கே நாங்கள் தொண்டர்களாக இருந்து தொண்டூழியம் செய்வோம் என்பதாகும்.”

 

Number of posters talking in Madurai!...


‘நிஜம் வெல்லும்!’   “இதற்கும் அர்த்தம் சொல்ல வேண்டுமா? அண்ணன் மட்டும்தான் நிஜம்! வேறு யாராக இருந்தாலும், நிழல்தான்!”

 

Number of posters talking in Madurai!...


‘ராசியானவரே! மாற்றம் 2021-ல் மறுபடியும் மாறும்..’ என்றால், “தென் மண்டல அமைப்புச் செயலாளராக அழகிரியண்ணன் இருந்த வரையிலும் திமுகவுக்கு வெற்றி முகம்தான்! என்றைக்கு அவர் புறக்கணிக்கப்பட்டாரோ, அன்றிலிருந்து இறங்கு முகம்தான்! கழகத்தில் ராசியானவர் என்றால் மு.க.அழகிரி ஒருவர்தான் என்பது கலைஞருக்கே தெரியும். 2021-ல் தற்போதைய நிலை நிச்சயம் மாறும்.”

 

Number of posters talking in Madurai!...


‘என்றும் கழகத்திற்கு எல்லாமே எங்க அண்ணன்தான்!’ – “எங்களைப் பொறுத்த மட்டிலும், கழகமும் அவரே! உறவும் அவரே! அண்ணன்தான் எங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறார்.”

 

Number of posters talking in Madurai!...


‘மலர் பாதையா? முள் படுக்கையா? எதுவாகினும் அண்ணன் வழியில்.. இந்த வழி ஒன்றுதான் என் வழி என்று நாம்!’ – “கட்சியில் கொடிகட்டிப் பறந்த காலம் ஒன்று இருந்தது. அது மலர் பாதை. இன்றோ, அங்கீகாரம் எதுவும் இல்லாமல் விலகி நின்று அரசியலை வேடிக்கை பார்க்க வேண்டியதிருக்கிறது. இது முள் படுக்கையைக் காட்டிலும் கொடுமையானது. அண்ணன் மீது கொண்ட பாசத்தினால், எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு நாட்களை நகர்த்தி வருகிறோம்.”

‘தலைமையேற்கும் எங்கள் தலைமையே!’,  ‘எது வந்தாகினும் எமக்கு நீயே!’,  ‘தமிழின தலைவரின் தடம் மாறா தலைமகனே!’ என்றெல்லாம் அண்ணனைப் புகழ்வதற்குக் காரணம் –  “எந்தச் சூழ்நிலையிலும் கட்சியை விட்டுக்கொடுக்காமல், எந்தப் பக்கமும் தாவாமல், ஒரே தடத்தில் அவர் பயணிப்பதுதான்!”

அடேங்கப்பா,  கோனார் தமிழ் உரை ரேஞ்சுக்கு அல்லவா மு.க.அழகிரி விசுவாசிகள், வாழ்த்து வாசகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.