Skip to main content

கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு... 

Published on 01/02/2021 | Edited on 01/02/2021

 

New restriction for Kodaikanal tourists ..

 

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலை விசிட் அடித்து கோடை இளவரசியை ரசித்து விட்டுச் செல்வது வழக்கம்.

 

ஆனால், இன்று (01.02.2021) முதல் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு, நகராட்சி நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், வாட்டர் பாட்டில் மற்றும் குளிர்பானம் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. 

 

சுற்றுலா நகர் கொடைக்கானலில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக்கைத் தவிர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஐந்து லிட்டருக்கு குறைவான குடிநீர் பாட்டில், குளிர் பானம் உள்பட இதர பொருட்களைத் தவிர்க்கும்படி குறிப்பிட்டுள்ளது. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கொடைக்கானலுக்கு குடிநீர் பாட்டில், குளிர்பானம் உள்ளிட்டவற்றைக் கொண்டுவர சுற்றுலா பயணிகளுக்கும், பிப்ரவரி 7ஆம் தேதி முதல் குடிநீர் பாட்டில், குளிர்பானங்களை நகரில் விற்பனை செய்யவும் தடை என  சப்-கலெக்டர்  சிவகுரு பிரபாகரன் மற்றும் நகராட்சி கமிஷனர் நாராயணன் தெரிவித்தனர்.

 

இந்த நடைமுறை நகராட்சி மற்றும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அமலுக்கு வருகிறது. மீறுவோருக்கு கண்காணிப்புக் குழு மூலம் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இது சம்பந்தமாக கொடைக்கானல் நகராட்சி கமிஷனர் நாராயணனிடம் கேட்டபோது, “நகராட்சியில் நான்கு இடங்கள் உள்பட மொத்தம் 15 இடங்களில் பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் வாட்டர் ஏ.டி.எம். இயந்திரங்கள்  அமைக்கப்படும். பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வாட்டர் பாட்டில், குளிர்பானம் கொண்டு வருவதைத் தடுக்க இன்று முதல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். பிப்ரவரி 7ஆம் தேதி முதல் முற்றிலும் தடை விதிக்கப்பட்டு, மலிவு விலையில் ஏ.டி.எம். மூலம் குடிநீர் வழங்கப்படும்” என்று கூறினார்.

 

இப்படி திடீரென வாட்டர் பாட்டில் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருப்பதைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொடைக்கானலில் 'காட்டுத்தீ' - சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
'Forest Fire' in Kodaikanal Hill

கொடைக்கானலில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக மலைப்பகுதிகளில் கோடைக்காலங்களில் காட்டுதீ ஏற்படும் நிலையில், சீதோஷ்ன நிலை மாற்றத்தின் காரணமாக தற்போதே காட்டுத்தீ ஏற்படும் சூழல் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களாக கொடைக்கானலில் ஒரு சில பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. வனப்பகுதிகள் மட்டுமல்லாது வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களிலும் தீயானது பரவி வருகிறது. குறிப்பாக கொடைக்கானல் பெருமாள் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

இதனால், கிட்டத்தட்ட 50 ஏக்கருக்கு மேற்பட்ட வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. தொடர்ந்து வனச்சரக பணியாளர்கள் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ தடுப்பு கோடுகள் இடப்பட்டுள்ளதால் விரைவில் தீ பரவல் கட்டுப்படுத்தப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளூர்வாசிகள் மூலம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் வரவேற்பை பெற்ற நிலையில் அதில் இடம்பெற்றுள்ள குணா குகையை பார்வையிட இந்த கோடையில் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காட்டுத்தீ சம்பவங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி அன்று தேனி, குரங்கணி பகுதியில் கொழுக்குமலை அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில், ட்ரெக்கிங் சென்ற 23 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

கொடைக்கானல் மலைப்பாதையில் விபத்து; பயணிகள் காயம்

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
incident on Kodaikanal Hill Pass Passenger issue

கொடைக்கானல் மலைப்பாதையில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு செல்லக்கூடிய மலைப்பாதையில் அடிவாரத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் டம்டாம் பாறை என்ற இடம் உள்ளது. இங்கு கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி அதிவேகமாக டிப்பர் லாரி ஒன்று வந்துள்ளது. அதே சமயம் வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானலுக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது.

இந்நிலையில் டம்டாம் பாறை அருகே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி பேருந்தில் இருந்த 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பேருந்தின் முன்பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாயமான பெண்ணை அங்குள்ள பொதுமக்கள் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.