திருவண்ணாமலை நகரம், தியாகி அண்ணாமலை நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான வேடியப்பன். இவரது மனைவி அன்புமலர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதிகளின் மூத்த மகன் 9 வயதாகும் ரகுநாத். அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் நடைபெறுவதால் இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் பள்ளம் தோண்டி மண் வெளியே கொட்டப்பட்டுள்ளது. இந்த மண்ணில் அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் வந்து விளையாடுவது வழக்கம். அதன்படி ஜீலை 9ந்தேதி காலை 7.30 மணியளவில் இந்த சாலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் மண்ணில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.

அங்கு மின்கம்பத்தில் இருந்து ஒரு மின் ஒயர் கீழே அறுந்து தொங்கிக் கொண்டிருந்துள்ளது. அதனை கவனிக்காமல் விளையாடியவன் அந்த ஓயரை பிடிக்க மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளான். அலறியபடி கீழே விழுந்தவனை பார்த்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து அவனை தூக்கி பார்த்தபோது, இறந்திருப்பது தெரிந்தது.

மேம்பால கட்டுமான பணியை எடுத்த ஒப்பந்ததாரர்கள் மின் ஒயரை கட் செய்து விட்டவர்கள், அதற்கான மின்சாரத்தை கட் செய்யாமல் விட்டுள்ளனர். இதனால் தான் எங்கள் குழந்தை இறந்தான் என அப்பகுதி மக்கள் பெரியார் சிலை முன்பு இறந்த குழந்தையை கிடத்தி சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனை அறிந்து நகர காவல்துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையிலான போலிஸார் வந்து சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுக்கிறோம் எனச்சொல்லி சாலை மறியலை கைவிட வைத்தனர்.
அதோடு, குழந்தையின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி, அது முடிந்த பின் உடலை தந்தனர். மேற்கண்டு மக்கள் போராட்டம் நடத்திவிடக்கூடாது என அப்பகுதி முழுவதும் போலிஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.