
நீலகிரி அருகே சாலையில் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் உதகை அடுத்துள்ள கக்குச்சி கிராமத்தில் கடை முன்பு நின்று கொண்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வளைவுப் பகுதியில் அதிவேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக அவர்கள் மீது கொடூரமாக மோதியது. உடனடியாக அங்கு இருந்த அக்கம்பக்கத்தினர் தூக்கி வீசப்பட்ட இரண்டு பெண்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரை இயக்கி வந்த நபர் அவருடைய காலணி பிரேக் அருகில் மாட்டிக் கொண்டதால் பிரேக் பிடிக்காமல் வண்டி கட்டுப்பாட்டை இழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.