Skip to main content

''மனிதனுக்கு மரணமில்லை'' -அதுதான் அவரின் இறுதிப் பேச்சு!!

Published on 28/07/2020 | Edited on 28/07/2020

 

 "Man has no death" - that was his final speech !!

 

சுதந்திர போராட்டத்தில் வால் ஏந்தியோ, துப்பாக்கி தூக்கியோ அவர் போராடவில்லை ஆனால் அவரின் கவிதைகள் நெருப்புப் பிழம்பாய் வெள்ளையர்களை எதிர்த்து ஈட்டியாய் குத்தியது. மக்கள் மனங்களில் ஆவேச நெருப்பை வார்த்தது, போர் பரணி மட்டுமல்ல மனித சமூக சமத்துவத்தை, பெண் உரிமையை, சிட்டுக்குருவி, காகம் என உயிரினத்தையும் நேசித்து பாடல்களை வாசித்த அற்புதக் கவி அவர். ஆம்... அவர்தான் மகாகவி என்றும், தேசியகவி எனவும் அழைக்கப்பட்ட பாரதியார்.
 

தமிழ்ச் சமூகத்திற்கே பெருமைமிகு அடையாளமான பாரதியார் இறுதியாகக் கலந்து கொண்ட வெளியூர் பயணம் என்றால் அது தந்தை பெரியார் பிறந்த மண்ணான ஈரோடு தான். ஈரோடு வந்து சென்ற சில நாட்களிலேயே பாரதியார் தனது சுவாசத்தை நிறுத்திக் கொண்டார். அது நிகழ்ந்து நூறு ஆண்டுகள் என்பதுதான் அவரைப் பற்றியான இந்த நினைவுச் செய்தி.

 

இறவா புகழ் கொண்ட அந்தத் தேசியக்கவி பாரதியார், யானையால் தாக்கப்பட்டு குணமடைந்த பின் வெளியூர் பயணமாக, 1921 ஜூலை, 31இல் ஈரோடு வந்தார்.

இவை குறித்து நெகிழ்ச்சியோடு கூறுகிறார் தொல்லியல் அறிஞர் ஈரோடு புலவர் ராசு அவர்கள்,

"ஈரோடு கருங்கல்பாளையத்தில் அப்போது காங்கிரஸ் பிரமுகராக இருந்த வக்கீல் எம்.கே.தங்கபெருமாள் பிள்ளை ஒரு நூலகத்தைத் தொடங்கியிருந்தார். அது கருங்கல்பாளையம் வாசகசாலை எனப் பெயரிடப்பட்டிருந்தது. அதன் ஆண்டு விழாவுக்காகத்தான் பாரதியார் அப்போது அழைக்கப்பட்டார்.

 "Man has no death" - that was his final speech !!


ஜூலை, 31இல் அந்த வாசக சாலையின் ஆண்டு விழாவில், ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில் பாரதியார் பேசினார். அதற்கு அடுத்த நாள் ஆக., 1ஆம் தேதியன்று காரைவாய்க்கால் என்ற பகுதியில் இருந்த மைதானத்தில் சுதேசிகள் அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில், ‘இந்தியாவின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் பேசினார். இதுவே, பாரதியாரின் இறுதிச் சொற்பொழிவாகும். அவர் சென்னை சென்ற பின், சுதேசமித்திரன் நாளிதழில், "சக்திதாசனின் ஈரோடு யாத்திரை "என்ற தலைப்பில், இரண்டு நாட்கள் கட்டுரை எழுதினார்.அது மிகவும் சுவையான கட்டுரையாகும்.

அந்தக் கட்டுரையில் பாரதியார் எழுதுகிறார். ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் தன்னை வரவேற்கச் சென்றவர்களுக்கு நான் தான் பாரதியார் என அடையாளம் தெரியவில்லை. ‘நானும் என்னை அறிமுகம் செய்து கொள்ளவில்லை. நானே மாட்டு வண்டி பிடித்து, மூன்று மைல் துாரம் உள்ள கருங்கல்பாளையம் கிராமத்துக்குச் சென்றேன். என்னையும், வண்டிக்கார சிறுவனையும், 2 பெரிய பருவதமாக நினைத்து, பூனைக்குட்டி போன்ற மாட்டுக்கன்று அழைத்துக் கொண்டு சென்றது,’ என ஈரோடு பயணத்தைப் பெருமிதமாக எழுதினார். அதேபோல் தங்கபெருமாள் பிள்ளை வீட்டில் பாரதியார் தங்கி இருந்தார். அப்போது வக்கீலுக்கான கோட்டை எடுத்து, அவரது மனைவிக்கு போட்டுவிட்டு, ‘பெண்கள் முன்னேற வேண்டும்’ என்றார், பாரதி. 


அது போலவே ஒரு இஸ்லாமியர் வீட்டில் பாரதியார் சாப்பிட்டதையும், அவரே முகச்சவரம் செய்ததையும் பார்த்து, ‘ஆச்சாரம் இல்லாத பிராமணன்’ என்று தங்கப் பெருமாள் பிள்ளை மனைவி கூறினாராம். அதையும் புகழ்ந்து கூறியிருக்கிறார். அவரது பெட்டியில் அவர் கவிதைகளை எல்லாம் நீள நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்ததைக் காட்டி, ‘தீப்பெட்டி போல என் கவிதை ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் என்றாராம். வழிச்செலவுக்கு கூட பணம் வாங்க மறுத்துவிட்டாராம் பாரதியார்.

 

http://onelink.to/nknapp


கடைசிப் பயணமாக, ஈரோடு வந்த பாரதியாரின் நுாற்றாண்டு நினைவை, ஈரோடு மக்கள் நினைவு கூற வேண்டும். அது, மாபெரும் தேசிய கவிஞருக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும் " எனக் கூறினார்.

'மனிதனுக்கு மரணமில்லை' என்ற தலைப்பில் பேசியதே மனித குலம் மறக்க முடியாத மாமனிதன் மகாகவி பாரதியின் இறுதிச் சொற்பொழிவாக அமைந்தது. அந்த நாள் இப்போது நூற்றாண்டைத் தொட்டுள்ளது. அதை நினைவில் ஏந்தி பாரதியார் புகழ் பாட வேண்டியது இந்த ஆட்சியாளர்களின் கடமை என்பதை உணர வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.