
காதல் தோல்வியால் 4வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற பெண்ணை சாதுரியமாகக் காப்பாற்றிய பெண் உதவி ஆய்வாளருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள மாம்பலத்தில் 27 வயது இளம்பெண் ஒருவர்க் காதல் தோல்வி காரணமாக கைகளை அறுத்துக்கொண்டு 4வது மாடியில் உள்ள ஜன்னல் வழியாகக் கீழே குதிக்க முயன்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள் தரைதளத்திலிருந்து அவரை காப்பாற்ற முயன்றனர். அதே சமயம் பெண் உதவி ஆய்வாளர் மீரா என்பவர் ஜன்னல் வழியாகக் கீழே குதிக்க அமர்ந்திருந்த பெண்ணிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு ஆறுதல் கூறினார்.
மற்றொருபுறம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற அவர் ஜன்னல் வழியாகக் குதிக்க இருந்த இளம் பெண்ணை சாதுரியமாக மீட்டார். இதனையடுத்து முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக இளம்பெண் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவல்துறை உயர் அதிகாரிகள் உதவி ஆய்வாளர் மீராவுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.