Skip to main content

மூன்று புதிய சட்டங்களை நிறுத்தி வைக்கக் கோரி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு; பணிகள் பாதிப்பு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Lawyers boycott court seeking suspension of three new laws

இந்தியா முழுக்க இன்று முதல் மூன்று புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய சட்டங்களுக்கு வக்கீல் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த  மூன்று புதிய சட்டங்களை நிறுத்தி வைக்கக் கோரியும், பெயர் மாற்றக் கோரியும் வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்) சார்பில் இன்று முதல் வரும் 8-ந் தேதி வரை கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் வக்கீல்கள் கோட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு பெருந்துறை கொடுமுடி அந்தியூர் பவானி உள் படம் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் வக்கீல்கள் இன்று முதல் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் மாவட்டம் முழுவதும் 1300க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டத்தின் அடுத்த கட்டமாக நாளை (செவ்வாய்க்கிழமை) அந்தந்த நீதிமன்றம் அருகே  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கொடுமுடியில் ஜன்சதாப்தி ரயில் நின்று செல்ல கோரி திமுக எம்.பி மனு

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
DMK MP petition demanding Janshatabdi train stop at Kodumudi

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பக்தர்களின் வசதிக்காக ஜன்சதாப்தி ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சரிடம் ஈரோடு எம்பி பிரகாஷ் நேரில் மனு கொடுத்து வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவியிடம் ஈரோடு எம்பி பிரகாஷ் அளித்துள்ள மனுவில், “ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடுமுடியில் மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் கோயில்கள் உள்ளது. இந்த புனிதத் தலத்திற்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.தற்போது தெற்கு ரயில்வே சார்பில் கோவையிலிருந்து மயிலாடுதுறைக்கும், மயிலாடுதுறையிலிருந்து கோவைக்கும் ஜனசதாப்தி ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரண்டு ரயில்களும் கொடுமுடி வழியாகச் செல்கின்றன. கொடுமுடி ஆன்மிக முக்கியத்துவம் பெற்ற இடமாக உள்ளதால் கொடுமுடி ரயில் நிலையத்தில் ஜன்சதாப்தி நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பக்தர்களுக்கு மட்டுமின்றி, கொடுமுடியில் உள்ள உள்ளூர் வியாபாரிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இதே போல ஈரோடு மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு ரயில்நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படுகின்றது. இந்த ரயில் அதிகாலை 3:40 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு சென்றுவிடுகின்றது. அதிகாலை நேரத்திற்கு சென்றுவிடுவதால் பயணிகள் சென்னை சென்ட்ரலில் இருந்து வெளியே செல்வதில் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. எனவே ஈரோட்டில் இருந்து இரவு 10 மணிக்கு ரயில் புறப்பட்டால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இக்கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மனுவை ரயில்வே வாரியத் தலைவர் ஜெயவர்மா சின்ஹாவிடமும் திமுக எம்.பி பிரகாஷ் அளித்துள்ளார். 

Next Story

புதிய குற்றவியல் சட்டங்கள்; எதிர்த்தும் ஆதரித்தும் வழக்கறிஞர்கள் மோதல்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
nn

புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதியான (01/07/2024) இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கம்லா மார்க்கெட் பகுதியில் சாலையோர கடை நடத்தி வந்த ஒருவர் பாதசாரிகளுக்கு இடையூறாக நடந்து கொண்டதாக 'பாரதிய நியாய சன்ஹிதா' எனும் புதிய குற்றவியல் சட்ட வழக்கு முதல் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய குற்றவியல் சட்டங்களின் அம்சங்கள்: ஆங்கிலேயக் காலத்து ஐ.பி.சி, சி.ஆர்.பி.சி, ஐ.இ.ஏ சட்டங்களுக்கு மாற்றாகப் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சக்ஷ்ய அதிநியம்  உள்ளிட்ட சமஸ்கிருத பெயர்களில் புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. விசாரணை நிறைவடைந்த 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்; முதல் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற நாளிலிருந்து அறுபது நாட்களுக்குள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும்; எங்குக் குற்றம் நடந்தாலும் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் செய்யலாம்; காவல்துறையிடம் இணைய வழியில் புகார்களைப் பதிவு செய்தல் மற்றும் அழைப்பாணைகளை அனுப்புதல்; குற்றம் நடைபெற்ற இடங்களைக் கட்டாயம் காணொளியாகப் பதிவு செய்தல் வேண்டும்; கொடூர குற்றங்களில் தடயவியல் நிபுணர்கள் குற்றம் நடந்த இடங்களுக்குச் சென்று சாட்சியங்களைச் சேகரிப்பது கட்டாயம்; பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பிற்காக வீடியோ, ஆடியோ மூலம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
 

புதுச்சேரியில் குற்றவியல் சட்டங்களை அம்மாநில முதல்வர் ரங்கசாமி அமல்படுத்தியுள்ளார். இந்நிலையில் மதுரையில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்களின் ஒரு பிரிவு உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதேபோல் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து மற்றொரு வழக்கறிஞர்கள் குழு போராட்டம் நடத்தி வருகிறது. இதில் இருதரப்பு வழக்கறிஞர்களுக்கிடையே கைகலப்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.