Skip to main content

கொடைக்கானல் ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்த விமல் மற்றும் சூரிக்கு அபராதம்!

Published on 23/07/2020 | Edited on 23/07/2020
actor vimal, soori

 

கொடைக்கானலில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான பேரிஜம் ஏரியில் அனுமதியின்றி நுழைந்து மீன் பிடித்த இரண்டு பிரபல நடிகர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

 

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதனை மீறி கொடைக்கானல் பகுதிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், நடிகர்கள் மற்றும் வியாபாரிகள் எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி வந்து செல்வதாக கூறப்படுகிறது.

 

இதன் காரணமாக நகர்ப்பகுதியில் நோய் தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. இன்று வரை கொடைக்கானல் தாலுகாவில் சுமார் 300 பேர்களுக்கு மேல் நோய் தொற்று உள்ள நிலையில், மேலும் பலருக்கு தொற்று ஏற்படலாம் என கருதப்படுகிறது. இதனிடையே கடந்த 17ஆம் தேதி பிரபல நடிகர்கள் விமல் மற்றும் சூரியுடன் இரண்டு இயக்குனர்களும் கொடைக்கானல் நகருக்கு வந்துள்ளனர். அத்துடன் வனத்துறையிடம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற்றுச் செல்லும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரி பகுதிக்கு எந்தவிதமான அனுமதியும் இன்றி சென்று அங்குள்ள ஏரியிலும் மீன்பிடித்து உள்ளனர்.

 

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வெளியான உடன் உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர் மகேந்திரன் ஆகியோர் காவல்துறையில் புகார் அளித்ததுடன் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட வன அதிகாரிகளிடம் தேஜஸ்வியிடம் கேட்டபோது கடந்த 17ஆம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஊரில் இல்லாத நிலையில், சில ஊழியர்கள் உதவியுடன் மற்றும் நடிகர்கள் விமல் மற்றும் சூரி உள்பட பலர் பேரிஜம் ஏரிக்கு அனுமதியின்றி சென்றுள்ளனர். இதுகுறித்து தற்போதுதான் தகவல் வந்துள்ளது.

 

தடை விதிக்கப்பட்ட பகுதிக்கு சென்ற இவர்கள் இருவருக்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. மோயர் பாயிண்ட் என்ற இடத்தில் உள்ள இரும்பு கேட்டை திறந்துதான் வாகனங்கள் செல்ல வேண்டும். அந்த கேட்டை திறந்து விட்டு அவருடன் சென்ற வன ஊழியர்கள் யார் என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

 

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கொடைக்கானல் நகரில் இருந்து சாமானியர் ஒருவர்கூட வெளி மாவட்டங்களுக்கு சென்று வர கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. ஆனால் வெளியூர்களைச் சேர்ந்த ஏராளமானோர் கொடைக்கானல் பகுதியில் முகாமிட்டு இருப்பது வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. இதன் காரணமாகவே நோய் தொற்று அதிகரித்து வருவதாகவும், அதிகாரிகள் இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் சோதனைச்சாவடி பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது என்றும்; வசதிபடைத்தவர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலர் வாகனத்தை நிறுத்தாமல் வந்துவிடுகின்றனர் எனக் கூறினர். மாவட்ட நிர்வாகமும், அரசும் உரிய நடவடிக்கை எடுத்து கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இரவில் வெளியே வர வேண்டாம்'-அரியலூர் மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 'Don't come out at night'-Admonition to people of Ariyalur

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ரஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வனத்துறை மருத்துவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், அரியலூர் மாவட்டத்தில் நடமாடும் சிறுத்தை, எலி, தவளை, நத்தை, மான், மயில் உள்ளிட்ட பறவைகளை  உண்ணக்கூடியது. இந்த நடமாடும் சிறுத்தைக்கு மற்ற உயிரினங்களைத் தாக்கும் எண்ணம் இல்லை. வளர்ப்பு பிராணிகளைச் சீண்டாத சிறுத்தை மனிதர்களிடம் பயந்த சுபாவம் கொண்டிருக்கும். அரியலூரில் நடமாடும் சிறுத்தை ஏலகிரி மலைக்கோ அல்லது அருகில் உள்ள பச்சை மலைக்கோ செல்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Next Story

ஊர் ஊராய் 'வி லாக்' காட்டும் சிறுத்தை; திணறும் வனத்துறை

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
A leopard showing 'vlog' from place to place; A forest department that is stifling

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் தோகர் கூறுகையில், 'கண்காணிப்பு பதிவை மட்டும் வைத்து அரியலூரில் காணப்பட்டது மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த அதே சிறுத்தையா என்பதை உறுதிப்படுத்த முடியாது. அதனுடைய தெளிவான புகைப்படம் கிடைக்க வேண்டும். இரண்டு சிறுத்தைகளின் புகைப்படம் மற்றும் வேறு சில தடையங்களை ஒப்பிட்டுப் பார்த்துதான் இரண்டும் ஒரே சிறுத்தையா என்பதை உறுதி செய்ய முடியும்'  என தெரிவித்துள்ளார்.

தற்பொழுது வரை மயிலாடுதுறையில் நான்கு கூண்டுகள் 20க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் வைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் அரியலூரில் இரண்டு கூண்டுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.