Skip to main content

பணியில் இல்லாத மருத்துவர்; தாய் மற்றும் சேய்க்கு நிகழ்ந்த சோகம்

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

kallakurichi kalvarayan hills child incident 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாழ்கிறார்கள். இன்னும் இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவு பெறாத நிலையில் உள்ளது. இந்நிலையில், மலையில் உள்ள ஆலனூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் மனைவி மல்லிகா (வயது 24). கூலித் தொழிலாளிகளான இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் மல்லிகா கருவுற்றார்.

 

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான மல்லிகாவுக்கு நேற்று முன்தினம் மாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரது உறவினர்கள் அவரை உடனடியாக சேராப்பட்டு அரசு சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில், இரவு சுமார் 8 மணியளவில் மல்லிகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த 10 நிமிடங்களில் குழந்தை இறந்துபோனது. பிரசவித்த தாய் மல்லிகாவிற்கு ரத்தப்போக்கு அதிகரித்துள்ளது. அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் மல்லிகாவின் உறவினர்களிடம் ரத்தப்போக்கை நிறுத்துவதற்கு கிளாங்காடு சுகாதார நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து மருந்து வாங்கி வரும்படி கூறியுள்ளனர். அவர்களும் கிளாங்காடு சுகாதார நிலையம் சென்று மருந்து வாங்கி வந்தனர். அதற்குள் இரவு 9.30 மணியளவில் ரத்தப்போக்கு காரணமாக மல்லிகாவும் உயிரிழந்துவிட்டார்.

 

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் மல்லிகாவின் உறவினர்களை சுகாதார நிலையத்தை விட்டு வெளியே அனுப்பிவிட்டு மருத்துவமனை கதவை உள்புறம் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டனர். அன்று அதிகாலை 1 மணியளவில் அந்த சுகாதார நிலையத்தின் பணி மருத்துவர் அங்கு வந்துள்ளார். சிகிச்சைக்கு வராத மருத்துவர் குழந்தையும் தாயும் இறந்த பிறகு வந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த மல்லிகாவின் உறவினர்கள் அங்கிருந்த டேபிள், சேர், டிவி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். அதோடு மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ், கச்சராபாளையம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த சேராப்பட்டு பகுதிக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தாயும் குழந்தையும் உயிரிழக்கக் காரணமான பணி மருத்துவர், பிரசவம் பார்த்த செவிலியர் ஆகியோரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கோட்டாட்சியர் பவித்ரா மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால் சேராப்பட்டு - மூலக்காடு பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கரியாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

சேவை நேரத்தில் சேலை செலக்சன்;ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலட்சியம்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Selection of saree during service; Negligence at primary health facility

மதுரையில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் நோயாளிகளை காக்க வைத்து விட்டு செவிலியர்கள் சேரி செலக்சன் செய்து கொண்டிருந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் நோயாளிகளை கவனிக்காமல் சேலை செலக்சன் செய்வதற்காக சென்றதாக அங்கு வந்த நோயாளிகள் பரபரப்பாக குற்றம்சாட்டி இருந்தனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்திருந்தது.

இந்தநிலையில் இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. மருத்துவ உதவிக்காக வந்த சிலர் எடுத்துள்ள அந்த வீடியோ காட்சியில் செவிலியர்கள் அறையில் சேலை வியாபாரம் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அங்கு சேலைகளை தேர்வு செய்ய செவிலியர் அமர்ந்திருந்தார். 'யாம்மா அரை மணி, ஒரு மணி நேரமா நோயாளிங்க காத்திருக்காங்க. இத வியாபாரம் பண்ணதான் நீங்க சம்பளம் வாங்குறீங்களா? ஒரு மணிநேரமா பேஷண்ட வச்சுக்கிட்டு இப்படியா பண்ணுவீங்க' என ஆதங்கத்துடன் அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பினர். வீடியோ எடுப்பதை சுதாரித்த செவிலியர் கீழே கிடந்த சேலைகளை எடுத்து பைகளில் போட்டுக்கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.