Skip to main content

போதையில் பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்!

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

incident in thenkasi

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரின் பரபரப்பான பேருந்து நிலையத்தில், பிழைப்பின் பொருட்டு நரிக்குறவர் சமுதாயத்தினர் ஊசி, பாசிமணி விற்று வருகின்றனர். நேற்று முன்தினம் நண்பகல் பேருந்து நிலையத்தில் மஃப்டியிலிருந்த போலீஸ்காரர் ஒருவர், பாசி விற்கும் நடுத்தர வயது நரிக்குறவப் பெண்ணிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் உறவினரான மாற்றுத் திறனாளியை அந்தப் போலீஸ்காரர் லத்தியால் தாக்க முயன்றிருக்கிறார்.

 

இச்சம்பத்தைக்கண்ட பயணிகள் சிலர் அவரைத் தட்டிக் கேட்டதில் அவர்களோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆவேசமான பயணிகள் அவரைச் சுற்றி வளைத்து அவரது கைகளைக் கட்டி புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மணிமுத்தாறு பட்டாலியனில் பணிபுரிந்து வருவதாவும், பணி முடிந்து அருகிலுள்ள தனது கிராமத்திற்குப் போக இருப்பதும் தெரியவந்திருக்கிறது. மது போதையிலிருந்த அந்த போலீஸ்காரர் மீது விஷயம் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர் புறக்காவல் போலீசார்.

 

incident in thenkasi

 

அதே போலீஸ்காரர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகரின் வங்கி ஒன்றில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளாராம். அதுசமயம் வங்கியின் பாதுகாப்புப் பணியிலிருந்தவர்கள் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஆரம்பத்திலேயே அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அவர் மீண்டும் தகராறில் ஈடுபடுவாரா என ஆதங்கப்படுகின்றனர் சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.