Skip to main content

போலீஸ் வாகனத்தின் மீது ஏறி தலைகால் புரியாமல் ஆட்டம்... அமைதிகாத்த போலீசார்!

Published on 30/10/2021 | Edited on 30/10/2021

 

incident in kamuthi

 

கமுதியில் காவலர்கள் வாகனம் என்றுகூட பாராமல் சில இளைஞர்கள் வாகனத்தின் மீது ஏறியும், வாகனத்தை வழிமறித்தும் அட்டகாசத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று பாதுகாப்புப் பணிக்காக போலீசார் வாகனம் வந்தபொழுது அங்கு இருந்த சில இளைஞர்கள் காவல்துறையின் வாகனத்திலிருந்து காவலர்களைக் கீழே இறக்கிவிட்டுவிட்டு ஜீப்பின் மீது ஏறி தலைகால் புரியாமல் ஆட்டம் போட்டனர். அதேபோல் நிகழ்ச்சி பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்க்க வந்த தாசில்தாரின் வாகனத்தின் மீதும் ஏறிய அந்த இளைஞர்கள் ஆட்டம் போட்டனர்.

 

இளைஞர்களின் இந்த செயலால் ஆத்திரமடைந்த போலீசார் இதுகுறித்து உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த நிலையில், விழா அமைதியாக நடைபெற வேண்டும் எனவே காவலர்கள் பொறுமை காக்க வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் இடையூறு ஏற்படுத்திய அந்த இளைஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல்  அமைதி காத்தனர். அரசு வாகனத்தின் மீது ஏறி இளைஞர்கள் ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.