
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது தேவியாநந்தல் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த வீரமணி என்பவரது மகள் 19 வயது சரஸ்வதி. இவர் கடந்த 2ஆம் தேதி வீட்டின் அருகில் கழுத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது தொடர்பாக திருநாவலூர் காவல் நிலையத்தில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக சரஸ்வதியின் தந்தை வீரமணி புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வந்தார். அந்த விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் ரங்கன் என்கிற ரங்கசாமி, சரஸ்வதியை கொலை செய்ததாக போலீசார் கைது செய்துள்ளனர்.
ரங்கசாமி அளித்த வாக்குமூலத்தில், “சரஸ்வதியை நான் காதலித்து வந்தேன். இந்த நிலையில் சரஸ்வதியின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடு செய்துவந்தனர். இந்த தகவல் அறிந்து நான் ஆத்திரமடைந்தேன். சம்பவத்தன்று அதிகாலை சரஸ்வதி அவரது வீட்டிலிருந்து வெளியே வரும்போது பேசினேன். சரஸ்வதி மீது உள்ள காதலை சொல்லி நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ வேண்டும் என்றேன். அதனால் நீ வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று சொன்னேன்.
அதற்கு சரஸ்வதி மறுத்தார். பின்னர், என் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை நான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறினார். இதனால் கோபமுற்ற நான் துணியால் சரஸ்வதியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் ரங்கசாமி. மேலும், இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் ரவீந்திரன், கிருஷ்ணசாமி உட்பட மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.