Skip to main content

கஜா புயல் நிவாரணம் கிடைக்கவில்லை;வட்டாச்சியரை சிறைப்பிடித்த பொதுமக்கள்

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

கஜாபுயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து வட்டாட்சியரை வாகனத்துடன் சிறைப்பிடித்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 

 

கஜாபுயல் கரையை கடந்து மூன்று மாதங்களை கடந்துவிட்டது. புயல் பாதித்தபகுதிகளில் பெரும்பாலான கிராமங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

 

kaja

 

அதன் ஒருபகுதியாக நாகை மாவட்டம்  கருங்கண்ணி ஊராட்சியில்  நிவாரணம் வழங்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கஜா புயலில் சேதமடைந்த வீடுகளுக்கு பாகுபாடு இல்லாமல் நிவாரணம் வழங்க வேண்டும்,  புயலால் உயிரிழந்த ஆடு மாடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

 

 

இதுகுறித்து தகவலறிந்த கீழ்வேளூர் தனி வட்டாட்சியர் அமுதவிஜயரங்கன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த  அவரது வாகனத்தில் வந்தார்.  அப்போது வாகனத்தை திடீரென முற்றுகையிட்ட பொதுமக்கள் வட்டாட்சியரையும் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விரைந்து வந்த காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் ஒருவார காலத்திற்குள் விடுபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என கூறியதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்