Skip to main content

கஜா புயல் - நிவாரணப்பணிகளில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவது ஏன்? கருணாஸ் கேள்வி

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
karunas



கஜா புயலின் பாதிப்பில் உணவு குடிநீர் இன்றி மக்கள் தத்தளிக்கின்றனர். நிவாரணப்பணிகளில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவது ஏன்? என்று எம்.எல்.ஏ., கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

கஜா புயலின் தாக்கத்தால் தஞ்சை டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாயிருப்பது பெரும் வேதனையளிக்கிறது. கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் மக்கள் அடைந்த துயரம் வரலாறு காணாத சோகம்.
 

இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கான மரங்கள், ஆடு மாடு கோழி என பல பல்லுயிர்களை  பலிவாங்கியுள்ளது இந்த புயல். பல ஆயிரம் வீடுகள் உடைந்து சேதமடைந்துள்ளன. ஒவ்வொரு தெருவிலும் பல வீடுகள் முற்றிலும் சிதைந்துவிட்டன. ஒளிவிளக்கு மின் கம்பங்கள் கணக்கிலடங்காத அளவில் சாய்ந்துவிட்டன.
 

மரங்களெல்லாம் பிணங்களைப்போல் கிடப்பதை கண்ணுற்றால் உள்நெஞ்சு பதைபதைக்கிறது. நான்கு நாட்களாக,  மக்கள் இருக்க இடமின்றியும், உடுத்த உடையின்றியும், குடிக்க நீரின்றியும் மின்சாரமில்லாத இரவுகளை கழிக்கின்றனர்; பெருந்துயரத்தோடு தத்தளிக்கின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக காப்பாற்ற வேண்டிய பணிகளில் அரசு தவறிவிட்டது.
 

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் சொல்லிக் போதிய அளவு நிவர்த்திய செய்யப்படவில்லை. இன்னும் பல ஊர்கள் புயல் அடித்த நிலமையிலிருந்து மீளவே இல்லை. தமிழக அரசின் நிவாரணப் பணிகள் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் அளவுக்குக் இருப்பதாக தெரியவில்லை.
 

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களும்  கடலோரப் பகுதிகளான தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிராம்பட்டினம், நாகை மாவட்டத்தின் வேதாரண்யம், உட்புறப் பகுதியான திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடி என கஜா புயலால் மிகவும் மோசமாக சிதைக்கப்பட்டிருக்கிறது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் பிற பகுதிகளும், திருச்சி புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளும் கடுமையான பாதிக்கப் பட்டுள்ளது.
 

புயலோ, மழையோ இயற்கையின் சீற்றத்தை எதிர்கொண்டு அதன் பாதிப்பிலிருந்து  இயல்பு நிலைக்கு அரசால் அதை கொண்டு வரமுடியும் என்பது இயல்பான காரிமில்லைதான் என்றாலும் இத்தகைய சூழலில் அரசு செய்ய வேண்டிய முதன்மையானப் பணிகளை உடனடியாக நிறைவேற்றுவதுதான் மக்கள் கடமையாகும். உணவு மற்றும் குடிநீர் தடையின்றி கிடைக்கச் செய்வதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை இயல்புநிலைக்கு அழைத்து வருவதுதான் அது. ஆனால் அதை அரசு செய்ய தவறிவிட்டது.
 

'கஜா' புயல் தாக்கி 4 நாட்கள் ஆகும் நிலையில் பாதிக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ல மக்களுக்கு குடிநீர் உணவு வழங்க மாவட்ட ஆட்சியர்கள் போதிய அளவு அக்கறை காட்டாததால் பல இடங்களில் மக்கள் போராடுகின்றனர். இந்த நிலைக்கு மக்கள் சென்றதற்கு தமிழக அரசு வெட்கப்படவேண்டும்.
 

'கஜா' புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் குழுவினரும், அப்பணிகளை மேற்பார்வையிட்டு வரும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் ஊரகப் பகுதிகளைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை என்பது தான் மிகப்பெரிய மக்கள் சொல்லும் குற்றச்சாட்டு சாலைகள் போக்குவரத்து  சீரமைக்கும் பணிகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியான தேவைகளை அரசு செய்ய முன் வரவேண்டும். எல்லாம் சரி செய்வதுபோல பாசாங்கு செய்யக்கூடாது. மக்கள் கோபத்தோடு கொந்தளிக்கின்றனர். அரசு புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.
 

முதன்மையான நிவாரண பணிகள் நிறைவடைந்ததும், சேதாரத்திற்கான இழப்பீடுகளில் காலம் தாழ்த்தாது அரசு செயல்படவேண்டும். தஞ்சை டெல்டா கடற்கரையோர மாவட்ட மக்களுக்கு ஒரு வீட்டுக்கு 10 இலட்சமும், தஞ்சை உட்புற ஊரகப் பகுதிகளில் உள்ளோருக்கு ஒரு வீட்டுக்கு தலா 5 இலட்சமும் தமிழக அரசு வழங்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும்.
 

இப்புயலால் ஒவ்வொரு வீட்டிலும் தென்னை மரங்கள் உள்ளிட்ட மரங்கள், ஆடு கோழிகள் என பல இழப்பீடுகளை மக்கள் சந்தித்துள்ளனர். அந்த பெரும் இழப்பீட்டை மக்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைவதே அவர்களுக்கு அரசு செய்யும் முதன்மை கடமையாகும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்