Skip to main content

வேளான் சட்டங்களை திரும்பப் பெற தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்...! - கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

Published on 23/12/2020 | Edited on 23/12/2020

 

Erode Communist Party meeting

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட குழுக் கூட்டம் ஈரோடு கட்சி அலுவலகத்தில் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மாநிலத் துணைச் செயலாளரும், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சுப்பராயன், தேசிய, மாநில அரசியல் நிலைகளையும், கட்சியின் மாநிலக்குழு கூட்ட முடிவுகளையும் விளக்கிப் பேசினார்.

 

இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டத் தலைவர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற முன்னாள் மாவட்டத் தலைவர் மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை, மத்திய பா.ஜ.க. அரசு சமையல் எரிவாயு உருளையின் விலை 15 நாட்களில் ரூபாய் 100 உயர்த்தியுள்ளது. வங்கி மூலம் மானியம் வழங்குவதாக மக்களுக்கு போக்குகாட்டி, எரிவாயு உருளை விலையை மோடி அரசு வஞ்சகமாக இரண்டு மடங்காக்கிவிட்டது. வேறு எரிபொருள் பயன்படுத்துவதை விட்டு விட்டு, எரிவாயுவை மட்டுமே மிக அதிகமான வீடுகள் பயன்படுத்துவதால், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் பெரும் சுமை ஏற்றப்பட்டுள்ளது.

 

கார்ப்பரேட் நலன்களுக்காக, மக்களின் நல்வாழ்வைப் பலியிடத் தயங்காத மோடி அரசின் இந்த நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு கண்டிப்பதுடன், எரிவாயு உருளையின் உயர்த்தப்பட்ட விலையைக் குறைக்கத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் உட்பட விவசாயிகள் விரோத, பெருவணிக நிறுவனங்கள் ஆதரவு வேளாண் சட்டங்களையும், விவசாயிகள் பெற்று வரும் இலவச மின்சாரம் மற்றும் மானிய மின் கட்டண சலுகைகளையும் பறிக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதாவையும் திரும்பப்பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் பாஜக அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து, கடுங்குளிர் தொடரும் சூழலில் நவம்பர் 26 முதல் லட்சோப லட்சக்கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் குடும்பம், குடும்பமாக நெடுஞ்சாலைகளில் அணிதிரண்டு அமைதியாகப் போராடி வருகிறார்கள். இந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தெற்கு  மாவட்ட குழு புரட்சிகர வாழ்த்துக்களையும், ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

 

மத்திய அரசின் விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் தீவிரமாக ஆதரித்து பரப்புரை செய்து வருகிறார். இது மாநில மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும். விவசாய விரோத வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டத் திருத்த மசோதாவையும் ஆதரிக்கும் நிலையைக் கைவிட்டு, போராடும் விவசாயிகளின் உணர்வுகளை மதித்து, அதனைப் பிரதிபலிக்கும் முறையில் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்தி, மத்திய அரசின் விவசாய விரோத சட்டங்களையும், மின்சார சட்டத் திருத்த மசோதாவையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு மாநில விவசாயிகளின் கோரிக்கைகளுக்கும், எதிர்பார்ப்பிற்கும் ஏற்ப புதிய சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

 

அதே போல் தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியார் மயப்படுத்துவதை கைவிட வேண்டும். குறிப்பாக துணை மின் நிலையங்களைப் பராமரிக்க அவுட்சோர்சிங் விடுவதையும், மின்சார வாரியத்தில் கம்பியாளர், உதவியாளர் பணிகளுக்கு காண்ட்ராக்ட் தொழிலாளர்களை நியமிப்பதையும் கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி., தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் நடத்திவரும் போராட்டத்திற்கு இக்கூட்டம் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. 

 

தமிழக அரசும், மின்சார வாரியமும் உடனடியாக தொழிற்சங்கங்களோடு பேச்சு வார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது. அடுத்ததாக எதிர்வரும் சட்டத் மன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதற்கு தேர்தல் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வதென்றும்,  மாவட்டம் முழுவதும் அனைத்து கிளைப் பகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பதென்றும், வாக்குச்சாவடி வாரியாக பூத் கமிட்டிகளை அமைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 96-ஆம் ஆண்டு அமைப்புதினமான 26-12-2020 அன்று அனைத்து கிளைகளிலும் கொடியேற்று விழாக்களைச் சிறப்பாக நடத்துவதென்றும் முடிவு செய்துள்ளார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.