
சிதம்பரம் வீனஸ் மழலையர் பள்ளியில் இந்தாண்டு சேர்ந்துள்ள எல்கேஜி மாணவர்களுக்கு மாலை அணிவித்து மலர் கொத்து வழங்கி மேளதாளத்துடன் வரவேற்றனர்.
சிதம்பரம் தேரடி தெருவில் உள்ள வீனஸ் மழலையர் பள்ளியில் எல்கேஜி வகுப்பில் இந்த ஆண்டு 40 மாணவ மாணவிகள் புதியதாக சேர்ந்துள்ளனர். இவர்களை வரவேற்கும் விதமாக பள்ளியின் அருகே உள்ள பிள்ளையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு பெற்றோர்களுடன் அழைத்து வரப்பட்டனர்.
மாணவர்கள் பள்ளி வளாகத்திற்கு வருகை தந்த போது பள்ளியின் தாளாளர் வீனஸ் குமார் மலர் கொத்து கொடுத்து வரவேற்று மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் இந்தப் பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் தற்போது எவ்வாறு உயர்கல்வியை பயில்கிறார்கள். அதேபோல் அரசு மற்றும் தனியார் துறையில் உயர் பதவியில் உள்ளார்கள் என்றும் கல்வியால் எந்த நிலைக்கும் ஒரு மனிதன் செல்ல முடியும் என்பதை விளக்கிக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து புதிய மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வகுப்பறையில் அமர வைத்தார், முன்னதாக பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் ஆசிரியைகள் திலகமிட்டு வரவேற்றனர். நிகழ்ச்சியில் பள்ளி இணைதாளாளர் ரூபியாள்ராணி, முதல்வர் லியோபெஸ்கிராவ், ராஜலட்சுமி, மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் சித்ரா, சோனியா காந்தி, கீர்த்தனா, சந்திரகலா மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்