Skip to main content

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து முதல்வர் முக்கிய தகவல்!

Published on 25/04/2025 | Edited on 25/04/2025

 

CM mk stalin important information regarding kalaignar women rights amount

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடந்த 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சட்டப் பேரவையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் இன்று (25.04.2025) பேசினார். அவரது கோரிக்கைக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறுக்கிட்டுப் பதிலளித்தது பேசுகையில், “உறுப்பினர் ஈஸ்வரன், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய அந்தத் திட்டத்தின்கீழ், ஒரு கோடியே 14 இலட்சம் பேர்களுக்கு அது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தகுதி வாய்ந்த எல்லோருக்கும் அது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெரியும். ஆனால், இன்னும் இதிலே விடுபட்டிருக்கக் கூடியவர்களுக்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும் அரசாங்கத்தின் கவனத்திற்குத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே, இந்த அவையிலும் அது எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, இதையெல்லாம் கருத்திலே கொண்டு, மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின்கீழ் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை உடனடியாக நிறைவேற்றுகிற பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். ஆகவே, அந்தப் பணியைப் பொறுத்தவரையில், வருகிற ஜூன் மாதம், 4ஆம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் கோரிக்கைகளைக் கேட்கக்கூடிய பணிகளை நாங்கள் தொடங்கவிருக்கிறோம். அந்தப் பணி 9 ஆயிரம் இடங்களில் நடைபெறவிருக்கிறது. அப்படி நடைபெறுகிறபோது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் விடுபட்டிருக்கிறதோ, அவர்கள் முறையாக விண்ணப்பித்தால் நிச்சயமாக விரைவில் அவர்களுக்கும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்