
திருப்பத்தூரில் நடைபெற்ற மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில், ''பாமக நடத்திய மாநாட்டில் கூட்டத்தைப் பார்த்து திமுக ஒரு முடிவு பண்ணிவிட்டார்கள். வன்னியர் சமூகத்திற்கு துரோகம் செய்த திமுக என்று பேசிவிட்டேன். வன்னியர்கள் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். காரணம் வன்னியர்களுக்கு துரோகம் செய்தது திமுக. களத்தில் நேர்மையாக திமுக நம்மைச் சந்திக்க முடியாது. தைரியம் கிடையாது. சூழ்ச்சியின் மூலமாகத்தான் குழப்பம் செய்ய வேண்டும் என்று செய்கிறார்கள். திமுக காரர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். சூழ்ச்சி செய்து, குழப்பம் செய்து சூழ்ச்சியாளர்களை வைத்து நம் கட்சியில் குழப்பம் நடக்கப் போவது கிடையாது. உறுதியான தைரியமான கட்சி பாமக தான்.
நான் மத்திய அமைச்சராக இருந்த பொழுது குட்கா லாபி, டொபாக்கோ லாபி என அனைத்தையும் தன்னந்தனியாக எதிர்த்தவன் நான். என்னை எப்படி எப்படியோ யார் யார் மூலமாகவோ வைத்து சமரசம் பேசினார்கள். உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ தருகிறோம் என்று சொன்னார்கள். நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என சொன்னார்கள். அன்றைக்கு வாங்க வேண்டும் என இருந்தால் எவ்வளவு வாங்கி இருப்பேன். குட்கா லாபி மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் நாங்க தருகிறோம் என அன்னைக்கு சொன்னான். டொபாக்கோ ஐயாயிரம் கோடி தருகிறோம் என்றார்கள். அன்னைக்கு வாங்கிக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்து கொண்டிருக்கலாம். ஆனால் எனக்கு அது முக்கியமில்லை பாமக பேர் முக்கியம். தமிழ்நாட்டில், இந்தியாவில் உள்ள இளைஞர்களின் நலன் முக்கியம் என கடைசிவரை சண்டை போட்டு உறுதியாக இருந்தேன்'' என்றார்.