Skip to main content

அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்!

Published on 06/01/2019 | Edited on 06/01/2019
b

 

அவரவர் வாழ்க்கைப் பரபரப்பில், பறவைகள் மீது அக்கறை கொள்வதெல்லாம் அரிதிலும் அரிதாகி விட்ட காலம் இது! ஆனாலும், பறவைகளை அதன் போக்கில் வாழவிடாமல் செய்து விடுகிறது மனிதன் கண்டுபிடித்த டெக்னாலஜி என்று 2.0 போன்ற திரைப்படங்கள் சுட்டிக் காட்டுவது ஆறுதல் அளிக்கிறது. அதே நேரத்தில்,  பறவை ஆர்வலர்களும் இருக்கவே செய்கின்றனர். 


விருதுநகர் மாவட்டத்தில், ராஜபாளையம் சேத்தூர்,தேவதானம் உள்ளிட்ட பகுதிகளில், இப்பருவ காலத்தில்,  ஆசிய நீர்ப் பறவைகள் மற்றும் பொங்கல் பறவைகள் வந்து செல்வது வழக்கம். இப்பறவைகளைக் கணக்கெடுக்கின்ற பயிற்சி யில், கடந்த இரண்டு நாட்களாக, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பறவை ஆர்வலர்கள் ஈடுபட்டனர். பறவைகளை வேடிக்கை பார்ப்பது போல், இவர்களையும் அப்பகுதிமக்கள் வேடிக்கை பார்த்தனர்.

 

பறவைகளின் நல்வாழ்க்கையில்தான், மனித வாழ்க்கை இருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவிலேயே காணக் கிடைக்காத அரியவகை பறவை; கன்னியாகுமரியில் கண்டுபிடிப்பு

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
rare bird that came to Kanyakumari from abroad

பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகள் தமிழகத்திற்கு வலசை வருவது வழக்கம். இவ்வாறு வலசை வருகின்ற பறவைகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு சரணாலயங்களுக்கு சென்று தஞ்சமடைகின்றன. இவ்வாறு வலசை வருகின்றதை கொண்டாடும் வகையில் உலக பறவைகள் தினம் கொண்டாடப்படுகிறது. பூமியின் வடகோளத்தை சேர்ந்த பறவைகள், அங்கு பனிப் பொழிவு தொடங்கும் போது, உணவு மற்றும் இதமான தட்பவெப்பம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும். அப்போது, உணவு மற்றும் தட்ப வெப்ப சூழல் முறையாக இருக்கும் பகுதிகளை நோக்கி பறக்க ஆரம்பிக்கும்.

இவ்வாறு இடம் பெயர ஆரம்பிக்கும் பறவைகள் இந்தியாவிற்கும் வருவது வழக்கம். அதன் பின்னர், சில மாதங்களுக்கு பிறகு வடகோளத்தில் பனிப் பொழிவு குறைந்து, பகல் பொழுது அதிகரிக்கும். அந்த சமயத்தில், இடம் பெயர்ந்து வந்த பறவைகள் அனைத்தும் மறுபடியும் அதனதன் பகுதிக்கு சென்றுவிடும். இவ்வாறு பறவைகள் வலசை வருவது சங்க இலக்கிய காலம் தொட்டு காணப்படுகிறது. இதற்கு சான்றாக பல சங்க இலக்கிய பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்திற்கு இந்தியாவில் காணப்படாத அரிய வகை பறவையொன்று வந்துள்ளது. பார்ப்பதற்கு ஆந்தை வகையைப் போல இருந்த அந்தப் பறவை தனது உடலில் காயத்தோடு ஆபத்தான நிலையில் அமர்ந்துள்ளது. இதனைக் கண்ட காகம் உள்ளிட்ட மற்ற பறவைகள் இந்த அரிய வகை பறவையை அங்கே அமரவிடாமல் துரத்தியுள்ளன. பின்னர், அங்கு வந்த அரண்மனை ஊழியர்கள் இதனைக் கவனித்துள்ளனர். உடனே காகம் உள்ளிட்ட பறவைகளை துரத்திவிட்டு, அந்த அரிய வகைப் பறவையை காப்பாற்றியுள்ளனர்.

பின்னர், இந்த அரண்மனைக்கு அருகிலேயே இருக்கும் உதயகிரி கோட்டை பல்லூயிரின பூங்காவிற்கு எடுத்துச் சென்று ஒப்படைத்துள்ளனர். அப்போது அந்தப் பறவையைப் பார்த்த பூங்காவில் உள்ள நிர்வாகிகள், இது அயல் நாட்டில் வாழ்கின்ற அரியவகை ஆந்தை இனம் எனக் கூறியுள்ளனர். அதன் பின்னர், காயத்தோடு இருந்த அந்தப் பறவைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பூங்கா ஊழியர்களிடம் கேட்ட போது, அந்தப் பறவைக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் பறக்க முடியாத நிலையில் உள்ளது. அதன் காயம் குணமாகும் வரை, அவற்றை உதயகிரி கோட்டை பல்லுயிரின பூங்காவில் வைத்து பராமரிக்க முடிவு செய்துள்ளோம். அந்தப் பறவை குணமடைந்த பிறகு அதனை திறந்து விடுவோம் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பறவை ஆர்வலர்களிடம் கேட்ட போது, பொதுவாக ஏப்ரல், மே மாதங்களின் போது பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் இந்தியாவிற்கு வருவது வழக்கம். இவ்வாறு வருகின்ற சில அரிய வகை பறவைகளை இங்குள்ள பறவைகள் கொத்தி காயப்படுத்தும் நிகழ்வுகளும் நடந்து விடும். பின்னர், இங்கு சில மாதங்கள் தங்கிவிட்டு மறுபடியும் அவைகள் வசித்த நாட்டுக்கே மறுபடியும் பறந்து விடும். இவ்வாறு பறவைகள் வலசை வந்து திரும்பும் நாளை ஆண்டு தோறும் மே, 10, 11 ஆம் தேதி உலக வலசை பறவைகள் தினமாக கொண்டாடுகின்றனர். உணவு தேடலுக்காக, தென்பகுதிக்கு சென்ற பறவைகள், வடபகுதிக்கு திரும்பும்போது, அவற்றை வரவேற்கும் விதமாக, அமெரிக்கர்கள் இந்த நாளை கொண்டாடுகின்றனர். நம் நாட்டில், வலசை வரும் பறவைகளை வரவேற்க, தனியாக எந்த நாளும் கடைபிடிப்பது வழக்கமில்லை எனக் கூறுகின்றனர்.

Next Story

“பெத்த புள்ள மாதிரி வளர்த்தேன்; கூப்பிட்டா ஓடோடி வரும்” - வனத்துறை நடவடிக்கையால் கண்ணீர் விட்டு அழுத பெண்மணி

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

 the woman who broke down in tears due to the forest department's action

 

வீட்டில் கிளிகளை வளர்ப்போர் உடனடியாக வனத்துறையிடம் கிளிகளை ஒப்படைக்குமாறு மதுரையில் வனத்துறை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று நோட்டீஸ் வழங்கியதோடு வீட்டில் வளர்க்கப்பட்ட கிளிகளையும் பறிமுதல் செய்தனர்.

 

மதுரையில் வீடுகளில் கிளிகளை வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜூலை 17 ஆம் தேதிக்குள் வீட்டில் வளர்க்கப்படும் கிளிகளை பொதுமக்கள் வனத்துறையிடம் ஒப்படைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வீடு வீடாகச் சென்ற வனத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து சட்ட விரோதமாக வளர்க்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட கிளிகளைக் கூண்டோடு பறிமுதல் செய்தனர்.

 

தமிழ்நாடு வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022ன் படி கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகக் கிளிகளை வீடுகளில், கடைகளில் வளர்க்கக் கூடாது. அதேபோல் விற்பனையும் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரையில் செல்லூர் பகுதியில் நூற்றுக்கணக்கான கிளிகள் வீடுகளில் வளர்க்கப்படுவதாகவும், அதற்கு ஒவ்வாத உணவுகளைக் கொடுத்து வருவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் தலைமையில் சோதனை நடத்தப்பட்டு சட்ட விரோதமாக வளர்க்கப்பட்ட கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

 the woman who broke down in tears due to the forest department's action

 

செல்லூர் பகுதியில் பல பெண்கள் தங்கள் வீட்டில் வளர்த்த கிளிகளைக் கண்ணீருடனும், சோகத்துடனும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பெண் ஒருவர் பாசமாக வளர்த்து வந்த கிளியை வனத்துறையிடம் கொடுக்கும் பொழுது கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்திக்கையில், ''என் பேரு முருகேஸ்வரி. என் புள்ள மாதிரி இந்த கிளியை வளர்த்தேன். என் பிள்ளைய சென்னையில கட்டிக் கொடுத்துவிட்டேன். பசங்க எல்லாம் வேலை வாங்கி அங்கேயும் இங்கேயும் போய் விடுகிறார்கள். இது மட்டும்தான் என்னோட வீட்டில் இருக்கும் பேசிக்கிட்டு. அபின்னு கூப்பிட்டா ஓடி வரும். அதனுடைய பேர் அபி. கூப்பிட்டா மேல ஏறி விளையாடும். ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு. முதல்ல ரெண்டு கிளி வளர்த்தேன். அது பறந்து போச்சு. ஒன்னுதான் இருக்கு. எல்லாமே சாப்பிடும். தயிர் சாதம், பச்சை மிளகாய், பழங்கள் எது வச்சாலும் எல்லாமே சாப்பிடும்'' என்றார் சோகத்துடன்.