Skip to main content

“ஆத்தா! நீ பார்த்துக்கோ!” - எட்டு வழிச்சாலை ‘கூலியை’ யார் பெறுவர்?

Published on 06/07/2018 | Edited on 06/07/2018


எட்டு வழிச்சாலை வேண்டவே வேண்டாம் என்று பல வழிகளிலும் மக்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களுக்கு முன்னால், மனித முயற்சிகள் தோற்றுப்போய் விடுமோ என்று சந்தேகம் எழுந்துவிட்டதாலோ என்னவோ, தெய்வத்திடம் முறையிட ஆரம்பித்திருக்கின்றனர்.

அம்மன் சன்னதியில் கூழ் காய்ச்சுவது, மனு கொடுப்பது என, ‘கடவுளே!  உன்னைவிட்டால் எங்களைக் காப்பாற்ற வேறு நாதியில்லை’ என்று நம்பிக்கையோடு சரணாகதி அடைந்திருக்கின்றனர். தங்களின் வாழ்வாதாரம் பறிபோய்விடும் என்ற மனஅழுத்தத்தின் காரணமாக சிலர் சாமியாடவும் செய்கிறார்கள். அத்தகையோரைக் கண் கண்ட கடவுளாக எண்ணி, “ஆத்தா! நீ பார்த்துக்கோ! எங்க நிலத்துக்கு நீதான் காவல்!” என்று கையெடுத்துக் கும்பிடுகிறார்கள் மக்கள்.   

 

 

‘உள்ளக் குமுறலைக் கடவுளிடம் கொட்டிவிட்டால் காரியம் கைகூடி விடும்’ என்ற மக்களின் நம்பிக்கை குறித்து பகுத்தறிவாளர் ஒருவர்  தன் கருத்தை பகிர்ந்துகொண்டார்.  

“கடவுள் நம்பிக்கையோ, வேறு சிந்தனையோ, எதுவாக இருந்தாலும், அதற்கொரு காரணமும் தேவையும் இருக்கும். அந்தத் தேவையானது வேறு வழியில் பூர்த்தியாகிவிட்டால் அது காணாமல் போய்விடும். ஒரு மிகச்சிறந்த அரசின் கீழ் வாழும் சூழல் மக்களுக்கு வாய்த்துவிட்டால், மதமும் கடவுளும் தேவையற்றதாகிவிடும். மேற்கத்திய நாடுகளில் நாத்திகர்கள் பெருகியதற்கு இதுவே காரணம்.” என்றார். 

‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ என்ற மனநிலையில் பசுமைச்சாலை திட்டத்துக்குத் தங்களின் எதிர்வினையாக அவரவர்க்கு முடிந்த அத்தனையையும், மக்கள் செய்த வண்ணம் இருக்கின்றனர். ‘தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ அய்யன் திருவள்ளுவரின் வாக்கு பிரகாரம், மக்களுக்கோ, அரசாங்கத்துக்கோ,  உரிய கூலி கிடைத்தால் சரிதான்.!

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.