Skip to main content

இன்ஸ்டாவில் கொடிகட்டிய புகையிலை விற்பனை- 6 பேர் அதிரடி கைது

Published on 20/06/2025 | Edited on 20/06/2025

 

 

திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் புகையிலை மற்றும் கஞ்சா அதிகரிப்பு காரணமாக இரவும் பகலமாக தனிப்படை அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சுழி அருகே தமிழ்ப்பாடி பகுதியில் சட்ட விரோதமாக மூடை, மூடையாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை பரிமாற்றம் நடப்பதாக திருச்சுழி டி.எஸ்.பி., தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து திருச்சுழி காவல் நிலைய எஸ்.ஐ.வீரணன் தலைமையில் தனிப்படை போலீசார் தமிழ்ப்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழ்ப்பாடி பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படமான  நள்ளிரவில் சுற்றித்திரிந்த ஆட்டோவை நிறுத்திய போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் ஆட்டோ டிரைவரான பொம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜகோபால் (29) மற்றும் வடக்கு நத்தம் பகுதியை சேர்ந்த ராஜபூபதி (32) ஆகியோர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதையடுத்து மேலும் ஆட்டோவை சோதனையிடும் போது மூட்டை, மூட்டையாக கணேஷ் புகையிலை, குட்கா, கூல் லிப், போன்ற அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்ததையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த திருச்சுழி போலீசார் ஆட்டோ டிரைவர் ராஜகோபால், மற்றும் விஜயபூபதி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் திருச்சுழி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் குறுந்தகவல் அனுப்பப்பட்டு ஒவ்வொரு பகுதிகளுக்கு வேன், லாரி மூலம் புகையிலை விநியோகம் பறிமாற்றம் அமோகமாக நடைபெற்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தகவல் கிடைத்ததன் பேரில் காவல்துறையினர் புகையிலைப் பொருட்களை மொத்தமாக பதுக்கி விற்பனை செய்யும் தொப்பலாக்கரையை சேர்ந்த அண்ணாமலை (29) என்பவரின் வீட்டை அதிரடியாக சோதனை மேற்கொண்டதில் மூட்டை, மூட்டையாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 3 ஆயிரம் கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அண்ணாமலையை கைது செய்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருச்சுழி போலீசார் பொம்மநாயக்கன்பட்டி ராஜகோபால்(29), வடக்கு நத்தம் ராஜபூபதி (32), தொப்பலாக்கரையை சேர்ந்த அண்ணாமலை (29) மற்றும் செம்பட்டியை சேர்ந்த முருகேசன் (42) ஆகிய 4 பேரையும்  கைது செய்தனர்.மேலும் இந்த சட்ட விரோத புகையிலை பதுக்கி வைத்தது தொடர்பாக மேலும் 3  பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கிராமப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து ஆட்டோ மூலம் விற்பனைக்கு கொண்டு சென்ற ஆட்டோ டிரைவரான மாற்றுத்திறனாளி இளைஞர் உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து  3 ஆயிரம் கிலோ எடையுள்ள சுமார் ரூ.23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை மூட்டை, மூட்டையாக போலீசார் பறிமுதல் செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அரசின் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யும் நபர்கள் தலைமறைவான நிலையில் அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அருப்புக்கோட்டை அருகே தனியார் விடுதியில் சோதனை செய்ததில் சென்னையைச் சேர்ந்த சேர்ந்த கற்குவேல் மற்றும் கனகலிங்கம் ஆகிய இருவரை பிடித்து விசாரித்ததில் தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமப்புற பகுதிகளில் இன்ஸ்டாகிராம் மூலமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து சுமார் 29 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய 10-க்கும் மேற்பட்ட செல்போன்களை திருச்சுழி தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து திருச்சுழி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்