Skip to main content

முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

E.R.Eswaran

 

28ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அனைவரும் பங்கேற்க வேண்டும். அரசின் திசை திருப்பும் முயற்சிக்கு வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கரோனா பேரிடர் காலத்தில் மக்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் கவனத்தைச் செலுத்தாமல், மத்திய அரசு புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டிக்கொண்டு இருப்பதை அனைவரும் அறிவோம். இந்தியா முழுவதும் கரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 

 

கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி பெரும் முதலாளிகளுக்கு நன்மை பயக்கும் மூன்று வேளாண் மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இந்த வேளாண் மசோதாக்களுக்கு இரு அவைகளிலும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் சர்வாதிகார போக்குடன் மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றி இருக்கிறது. இதைக் கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். 

 

கரோனாவினால் இந்தியாவே முடக்கப்பட்ட நேரத்திலும் விவசாயிகள் விவசாயத்தைக் கைவிடாமல் செய்த காரணத்தினால்தான் தட்டுப்பாடு ஏற்படாமல் அத்தியாவசிய பொருட்கள் அனைத்து மக்களுக்கும் கிடைத்தது. இப்படி நாட்டு மக்களுக்காக அனுதினமும் உழைக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் சூழ்நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில்தான் விவசாயிகளின் உரிமைக்காகப் போராட வேண்டிய கட்டாயம் நமக்கெல்லாம் உருவாகியிருக்கிறது. 

 

மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து வருகின்ற 28-ஆம் தேதி திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த தி.மு.க தலைமையிலான நம் கூட்டணிக் கட்சிகள் முடிவெடுத்து, அதற்கான ஏற்பாடுகளை அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நிர்வாகிகள் ஒன்றிணைந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.


கரோனா பேரிடர் காலத்தில் இப்போராட்டம் நடைபெறுவதால், தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கரோனா காலத்து கட்டுப்பாடுகளை நாம் கடைப்பிடிக்காமல் மீறுவோமா என்று மத்திய, மாநில அரசுகளும், உளவுத்துறையும் ஆவலோடு கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். 

 

Ad

 

ஏதாவது விதிமீறல்கள் நடந்தால் போராட்டம் நடத்துவதால் மக்கள் மத்தியில் வருகின்ற தாக்கத்தை, விழிப்புணர்வைத் திசை திருப்புகின்ற வகையிலே கரோனா பரவலுக்குக் காரணமாக நம் போராட்டம் இருந்தது என்று விளம்பரப்படுத்துவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். முழுமையாக நம் போராட்டத்தினுடைய தாக்கம் மக்களுக்கும், அரசுக்கும் சென்றடைய வேண்டுமென்றால் சிறு தளர்வுகள் கூட இல்லாமல் நாம் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். 

 

விவசாயிகளுக்காக நாம் நடத்தும் ஆர்ப்பாட்டம், அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தினால் மட்டும்தான் ஜவுளித்துறையை காப்பாற்ற முடியும்"- ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கோரிக்கை! 

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

"Only by stopping cotton exports can the textile sector be saved" - ER Eswaran MLA Request!

 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் இன்று (16/05/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளித் துறையை சார்ந்த அனைவரும் செய்வதறியாமல் தடுமாறி கொண்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தமிழகம் எதிர்கொண்டு இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு மேலாக, இதே சூழ்நிலை நீடிக்கின்ற நிலையிலும் ஒன்றிய அரசு இதைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. 

 

உடனடியாக பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தினால் மட்டும்தான் ஜவுளித்துறையை காப்பாற்ற முடியும். பாதிப்பின் தீவிரத்தை உணராமல் ஒன்றிய அரசு அமைதி காப்பது வேதனையை அதிகப்படுத்துகிறது. குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெருமளவில் பஞ்சு பதுக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் பயன்பாட்டுக்கு வராமல் நூல் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து பஞ்சு எடுக்கப்பட்டது தான் இந்த கொடுமைக்கு காரணமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக மேலும் தங்களை தாங்களே நஷ்டப்படுத்தி கொண்டு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள். 

 

தமிழக முதலமைச்சரும் தொடர்ந்து மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் தொடர்ந்து கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். தொழில் துறையை சார்ந்தவர்கள் ஒன்றிய அமைச்சரை சந்தித்து முறையீடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவுக்கு அப்புறமும் ஒன்றிய அரசு கண்டு கொள்வதாக இல்லை. தமிழகத்தினுடைய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழக ஜவுளி துறையின் உண்மை நிலையை ஒன்றிய அரசுக்கு எடுத்து செல்ல வேண்டும். இது இன்றியமையாத ஆக்கப்பூர்வமான தமிழகத்தின் தேவை. நூல் விலை விஷயத்தில் கருத்துக்களை கூறாமல் அமைதி காப்பதும் ஏற்புடையதல்ல. உடனடியாக உங்கள் முயற்சிகளை தொடங்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Next Story

“முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்குமான உறவு சுமூகமாக இல்லை என்பதை காட்டுகிறது” - ஈஸ்வரன்

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

It shows that the relationship between the Chief Minister and the Deputy Chief Minister is not smooth says Eeswaran

 

"வெறும் சம்பிரதாயத்திற்கு வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாக இடைக்கால நிதிநிலை அறிக்கை இருக்கிறது" என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், "2011-ஆம் ஆண்டிலே 1 லட்சம் கோடியாக இருந்த தமிழக கடனை 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக உயர்த்தி தமிழக மக்களைக் கடனாளிகளாக மாற்றியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அடுத்த நிதிநிலை ஆண்டில் கடன் வாங்க தேவை இருக்காது என்று அறிவித்திருப்பது அமைய இருக்கின்ற புதிய ஆட்சியின் மீதுள்ள நம்பிக்கையா? 


தமிழகத்தின் வருமானம் 18 சதவீதம் குறையும் என்று அறிவித்துவிட்டு அரசினுடைய விளம்பரங்களுக்காக நூற்றுக்கணக்கான கோடியை தேர்தலை குறிவைத்துச் செலவு செய்திருப்பது ஏற்புடையதல்ல. பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்காக தமிழக அரசின் மதிப்புக்கூட்டு வரி குறைக்கப்படும் என்ற மக்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கி இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் மீதான வரி வருங்காலத்தில் உயரும் என்று சொல்லியிருப்பது வேதனையிலும் வேதனை.

 

காலாவதியாகப் போகிற அரசு போகிற போக்கில் 6,600 கோடியில் கோவையில் மெட்ரோ ரயில் என்று அறிவித்திருப்பது தேர்தலை குறிவைத்து நடத்தியிருக்கின்ற நாடகம். கவலையும் கஷ்டமும் வேதனையும் தவிர தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மிஞ்சி இருப்பது எதுவுமில்லை. பலவிதமான சலுகைகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்திருந்த நிலையில், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் எதுவுமே இல்லாதது முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்குமான உறவு சுமூகமாக இல்லை என்பதைக் காட்டுகிறது. எதிர்பார்த்த சலுகை அறிவிப்புகள் எல்லாம் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பதற்காகக் காத்திருக்கிறதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.