Skip to main content

திமுகவை வீழ்த்த டிடிவியின் ஃபார்முலா; அமமுகவின் ஆறாம் ஆண்டு துவக்க விழாவில் உறுதிமொழி

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

TTV's formula to defeat DMK; Pledge of Allegiance at the Sixth Annual Festival of AMMK

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 6ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சியின் கொடியேற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதன் பின் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “பிறரின் தூண்டுதலின் பேரில் தான் ஓபிஎஸ் தர்மயுத்தத்தை துவங்கினார். இப்பொழுது அவர் தனது தவறை உணர்ந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்கிறார். பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது தெரியும். அவர் ஜெயலலிதாவின் பாதையில் இருந்து விலகி தனியாகச் சென்றார். அதனால், வேறு வழியில்லாமல் உருவாக்கப்பட்டது தான் அமமுக. ஆனால், பழனிசாமிதான் எதிர்க்கட்சித் தலைவர். ஜெயலலிதாவை விட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதற்கு நான் சிரித்துக் கொண்டே பதிலளிக்க தகுந்த சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இதற்கு முன் அதிமுக ஜா-ஜெ எனப் பிரிந்திருந்த பொழுது தமிழகம் முழுவதும் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா, 28 இடங்களில் வெற்றி பெற்றார். அதில் ஈரோட்டில் மட்டும் 5 இடங்களில் வெற்றி பெற்றார். 

 

ஆனால், பழனிசாமி கம்பெனி நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. திமுகவிற்கு 60 மாதங்களில் வரவேண்டிய கெட்டப்பெயர் 20 மாதங்களில் வந்த பொழுதும் அதிமுகவால் அதை வாக்குகளாக மாற்ற முடியவில்லை. இன்று அவர்களிடத்தில் இரட்டை இலை இருக்கும் காரணத்தால் தான் அதிமுக தொண்டர்கள் வேறு வழியின்றி அங்கு இருக்கிறார்கள். அப்படி இருந்தும் தற்பொழுது தொண்டர்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை சின்னம் நிரந்தரமாகக் கொடுக்கப்பட்டாலும் அது பலவீனமடைந்துள்ளது. முதலமைச்சராக இருந்த போது மத்திய அரசின் உதவியுடன் ஆட்சியைக் காப்பாற்றியவர்கள் தற்போது ஆட்சியை இழந்துள்ளார்கள். பலவீனப்பட்டு உணர்ந்துதான் திருந்துவார்கள். திமுகவை வீழ்த்த ஓரணியில் கூட்டணியாக இணைந்து வீழ்த்துவோம் என்பது தான் அமமுகவின் ஆறாம் ஆண்டு உறுதிமொழி. 

 

சில நிர்வாகிகள் அமமுகவில் வருவதும் போவதுமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். சிலர் அரசியலுக்கே புதிதாக வந்து அமமுகவில் தான் பதவிகளைக் கொடுத்தோம். இன்னொரு கட்சிக்கு போவதற்கு அவர்களுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். அவர்கள் போன பின்பு அவர்கள் இடத்திற்கு அவர்களை விட திறமையான சிறப்பான நிர்வாகிகளை நியமிக்கிறோம். இங்கிருந்து வேறு கட்சிக்குச் சென்று அங்கே அவர்களுக்கு என்ன மரியாதை கிடைத்துவிடும் என்று எனக்குத் தெரியாது. இங்கு அவர்களை மரியாதையாகத்தான் வைத்திருந்தோம்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.