Skip to main content

“திமுக என்றும் அறிவாலயம் என்றும் போட்டிருக்கலாம்” - சசிகலா

Published on 17/01/2023 | Edited on 17/01/2023

 

Sasikala talks about DMK's action

 

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்தநாளை அதிமுகவினர் மிக உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு இ.பி.எஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது வீட்டில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

 

Sasikala talks about DMK's action

 

இந்நிலையில், எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி சசிகலா தனது தி.நகர் இல்லத்தில் எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, “எந்த மாநிலமாக இருந்தாலும் ஆளுநரை எப்படி நடத்த வேண்டும் என்று முறை உள்ளது. அதன்படி தமிழக அரசும் செய்ய வேண்டும். மத்திய அரசுடனும் ஆளுநருடனும் சண்டை போட்டு காலத்தை ஓட்டினால், ஓட்டு போட்ட மக்களுக்கு அரசு என்ன செய்ய முடியும்.  

 

திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றால் அதிமுக ஒன்றுபட்டு இருக்க வேண்டும். ஒற்றுமையுடன் இருந்து வெற்றிபெற்று வெற்றியை எங்கள் தலைவர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும். அந்த ஒரே காரணத்தை நினைத்து அனைவரும் ஒன்றிணைந்து திமுகவிற்கு தக்க பாடம் கற்பிப்போம். 

 

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு இருக்கிறது. திமுகவினரின் காளைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். திமுககாரர்களிடம் ஸ்பெஷலான ஒரு விஷயம் உள்ளது. திமுக ஏதாவது ஒரு தவறைச் செய்கிறது என்றால், அதற்கு முன்பே அதனைச் சுற்றிலும் உள்ள விஷயங்களைச் சரிசெய்து விடுவார்கள். அதன் பின்பே அந்த தவறைச் செய்கிறார்கள். இதுகுறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதது போலத்தான் அரசாங்கத்தை நடத்துகிறார்கள். 

 

ஜல்லிக்கட்டு குறித்து மாவட்ட ஆட்சியர் பார்த்துக்கொள்வார் எனச் சொல்லிவிட்டு மாவட்ட ஆட்சியரும் மாவட்ட அமைச்சரும் சேர்ந்து கிட்டத்தட்ட 200 முதல் 300 காளைகளை பந்தயத்திற்கே விடவில்லை. காளைகள் எல்லாம் சோர்ந்து போன பின்பு தான் அதன் உரிமையாளர்கள் அழைத்துச் சென்றனர். அதற்கு காரணம் அவனியாபுரத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதன் பின் அவர்களது படங்கள் போட்ட உடைகள் தான் போட்டியை நடத்துபவர்கள் அணிந்து இருந்தார்கள். இதற்கு திமுக என்றும் அறிவாலயம் என்றும் பெயர் போட்டு நடத்தி இருக்கலாம். 

 

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் சந்திக்கத் திட்டம் உள்ளதா எனக் கேட்கின்றனர். ஆரம்பத்தில் இருந்து என் உத்தியைப் பார்த்துக்கொண்டு உள்ளீர்கள். அது விரைவில் நடக்கும். எங்கள் கட்சிக்காரர்களை நான் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது” எனக் கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.