Skip to main content

“மோடி சொன்ன வாக்கு; வானத்தைக் கிழித்துக் கொண்டு பாய்ந்த சந்திரயான்” - மத்திய அமைச்சர்

Published on 14/07/2023 | Edited on 14/07/2023

 

Union Minister of State Jitendra Singh comments on Chandrayaan

 

நிலவில் ஆய்வு செய்வதற்கான முன்னெடுப்புகளை உலக நாடுகள் பலவும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா சார்பில் சந்திரயான்-3 என்ற விண்கலம் ஏவப்பட இருந்தது. இதற்கானத் தயாரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 இன்று விண்ணில் பாய்ந்தது.

 

இதற்கு முன்பாகவே 2008 ஆம் ஆண்டு சந்திரயான்-1, 2019-ல் சந்திரயான்-2 ஆகியவை விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது.  அதில் கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவை ஆய்வு செய்ய இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 2 என்ற விண்கலம் நிலவின் சுற்றுப் பாதையைச் சென்றடைந்த போதிலும் தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் கருவி திட்டமிட்டபடி தரையிறங்காமல் வேகமாகத் தரையிறங்கியதால் வெடித்துச் சுக்குநூறாக உடைந்தது. 

 

இந்த நிலையில் இஸ்ரோ மீண்டும் நிலவை ஆய்வு செய்ய ரூ. 615 கோடி மதிப்பில் சந்திரயான் 3 என்ற விண்கலத்தை வடிவமைத்துள்ளது. நிலவுக்குச் செல்லும் 'சந்திரயான் 3' விண்கலத்தைச் சுமந்தபடி, எல்.வி.எம் 3 - எம்4 ராக்கெட் இன்று பிற்பகல் 2.35 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் பாய்ந்தது. ஆகஸ்ட் 23 அல்லது 24 ஆம் தேதிகளில் சந்திரயான் விண்கலத்தை நிலவில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “இந்தியாவிற்கு வாழ்த்துக்கள். இதற்காக உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி. நிலவிற்கான பயணத்தை சந்திரயான் 3 தொடங்கியுள்ளது. அனைத்து கட்டங்களையும் கடந்து சந்திரயான் 3 நிலவில் தரையிறங்க வாழ்த்துகளைத் தெரிவிப்போம். புவி வட்டப் பாதையில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் இயக்கம் திருப்திகரமாக உள்ளது” என்றார். 

 

இவரைத் தொடர்ந்து பேசிய மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், “தற்சார்பு இந்தியா திட்டத்தில் சந்திரயான் 3 உருவாக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திரயான் 3 மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது; இந்தியாவே பெருமைப்படுகிறது. சமீபத்தில் பிரதமர் மோடி வானம் எல்லை இல்லை என்று பேசியிருந்தார். அதற்கு ஏற்றார்போல் சந்திரயான் 3 வானத்தைக் கிழித்துக் கொண்டு சென்றது; தனது பயணத்தைத் தொடங்கியது” என்றார்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்காணிப்பை தொடங்கியது ‘இன்சாட் 3டிஎஸ்’ செயற்கைக்கோள்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'Insat 3DS' satellite started monitoring!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO - இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்திருந்தது. இந்த செயற்கைக்கோள் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் கடந்த 17 ஆம் தேதி (17-02-2024) மாலை 5.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி. எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டதாகும். 2 ஆயிரத்து 274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வானிலை ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்ட இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள் தனது கண்காணிப்பை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 7 ஆம் தேதி இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் நிலமேற்பரப்பு, வெப்பநிலை, மூடுபனி தீவிரம் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட தரவுகளை இந்த செயற்கைக்கோள் வழங்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ககன்யான் திட்டம்; விண்வெளி வீரராகத் தமிழர் தேர்வு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
gaganyan Project Tamil chosen as an astronaut

ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா என 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு இதுவரையில் மனிதர்களை அனுப்பியுள்ளன. அந்த வகையில் இந்தச் சாதனையைப் படைக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காகக் கடந்த 2007 ஆம் ஆண்டு 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்துக்கு ககன்யான் எனப் பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் ரஷ்யாவில் 14 மாதங்கள் பயிற்சி பெற்று ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி இன்று அறிமுகம் செய்து வைத்தார். இந்த குழுவில், குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு ககன்யான் திட்டத்திற்கான லோகோவை பிரதமர் மோடி வழங்கினார்.

இது குறித்து பிரதமர் மோடி தெரிவிக்கையில், “2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவுக்கென தனி ஆய்வு மையம் அமையவுள்ளது. 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் தயாரிக்கப்படும் ராக்கெட் மூலம் இந்தியர்கள் நிலவில் கால் பதிப்பர். 4 இந்திய விண்வெளி வீரர்களுக்கு லோகோவை ஒப்படைத்தது எனக்கு மிகவும் சிறப்பான தருணம் ஆகும். இது 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன. குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோரால் இந்தியா பெருமை கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

gaganyan Project Tamil chosen as an astronaut

இந்நிலையில், ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 4 பேரில் ஒருவர் தமிழர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். சென்னையில் பிறந்த இவர் உதகையில் உள்ள வெலிங்கடன் ராணுவ கல்லூரியில் பயின்றவர் ஆவார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் கடந்த 2003 ஆம் ஆண்டு விமானப் படையில் பணியில் இணைந்தார். இந்திய விமானப் படையில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஜனாதிபதியின் தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளார். இவர் இந்திய விமானப் படையின் புதிய போர் விமானங்களின் டெஸ்டிங் பைலட்டாகவும் பணியாற்றி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.