Skip to main content

ஏர் இந்தியாவை டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது மத்திய அரசு!

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

air india

 

இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இதனையடுத்து அந்த நிறுவனத்தை, கடந்த 2018ஆம் ஆண்டே விற்க மத்திய அரசு முயற்சி செய்தது. ஆனால், அப்போது ஏர் இந்தியாவை வாங்க யாரும் முன்வரவில்லை.

 

இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்னர் ஏர் இந்தியாவை விற்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.  இதனைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் டாடா குழுமம் இறங்கியது. கடந்தாண்டு ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி டாடா குழுமம், ஏர் இந்தியாவை வாங்குவதற்கான ஏலத்தொகையை சமர்ப்பித்தது.

 

இதனைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம், ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வங்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இந்தநிலையில் தற்போது ஏர் இந்தியா நிறுவனம், அதிகாரப்பூர்வமாக டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  1932ஆம் ஆண்டு டாடா குழுமம் ஆரம்பித்த டாடா ஏர்லைன்ஸ்தான் 1946ஆம் ஆண்டு ஏர் இந்தியா எனப் பெயர் மாற்றப்பட்டது. இதன்பின்னர் 1953ஆம் ஆண்டு ஏர் இந்தியா அரசுடைமையாக்கப்பட்டது. இந்தநிலையில் ஏர் இந்தியா தற்போது டாடா குழுமத்திற்கே சென்றுள்ளது.

 

ஏர் இந்தியா முறைப்படி டாடா குழுமத்திடம் இன்று ஒப்படைக்கப்படுவதற்கு முன்பாக, டாடா சான்ஸின் தலைவர் சந்திரசேகரன், பிரதமர் மோடியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியடாடா சான்ஸின் தலைவர் சந்திரசேகரன், "இந்த (நிறுவனத்தை ஒப்படைப்பதற்கான) செயல்முறை நிறைவடைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஏர் இந்தியா மீண்டும் டாடா குழுமத்தில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. உலகத்தரம் வாய்ந்த விமான சேவையை உருவாக்க அனைவருடனும் இணைந்து நடைபோடுவதை நாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம்" எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்