Skip to main content

டிக் டாக் பிரபலமும் பிஜேபி வேட்பாளருமான சோனாலி போகத் மறைவு

Published on 23/08/2022 | Edited on 23/08/2022

 

sonali bogath

 

டிக் டாக் பிரபலமும் ஹரியானா மாநில ஆடம்பூர் பகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான சோனாலி போகத் மாரடைப்பால் காலமானார்.

 

41 வயதான சோனாலி போகத் 2006ல் ஒரு தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். டிக் டாக் செயலி வந்தபிறகு அதில் தான் நடித்த பதிவுகளை பதிவிட்டதன் மூலம் தேசிய அளவில் புகழ் பெற்றார். அதன் பின் 2019ல் ஒரு வெப் சீரிஸிலும் நடித்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். 

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். 2019ல் ஹரியானா மாநில ஹிசார் மாவட்டத்தில் ஆடம்பூர் தொகுதியின் சட்டமன்ற வேட்பாளராக பாஜக சார்பில் போட்டியிட்டு தோற்றார். இந்நிலையில், சில தினங்கள் முன்பு ஒரு தனியார் நிகழ்ச்சிக்காக தனது குழுவினருடன் கோவா சென்றவர், திங்கள் அன்று  இரவு தனக்கு அசௌகரிய நிலை ஏற்படவே தனது பணியாளர்களிடம் தெரிவித்தார். அவர்கள் சோனாலி போகத்தை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவ மனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சோனாலி போகத் இறப்பிற்கு இரண்டு மணிநேரம் முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்ஸ்டா ரீல் ஒன்றை பதிவிட்டிருந்தார். தற்போது அவர் கடைசியாக பதிவிட்ட ரீல் வைரல் ஆகி வருகிறது. 

 

இவரது கணவர் சஞ்சய் போகத் சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்த நிலையில், கணவர் இறந்ததால் தான்  அதிக மன உளைச்சலில் இருப்பதாக நாளிதழ் ஒன்றுக்கு அவர் அப்போது பேட்டி அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. மகள் யசோதரா போகத் உடன் தனியே வசித்து  வந்த போகத்தின் இறப்பு செய்தி ஹரியானா மாநில மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.