Skip to main content

‘ஒன்றிய’ சர்ச்சைக்கு விளக்கமளித்த புதுச்சேரி கவர்னர் மாளிகை! 

Published on 01/07/2021 | Edited on 01/07/2021
Puducherry Governor's House explains 'Union' controversy

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் - பாரதிய ஜனதா கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 27.06.2021 அன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற எளிய விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லக்ஷ்மிநாராயணன், ஜெயக்குமார், சாய். சரவணகுமார், சந்திர. பிரியங்கா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். இந்தப் பதவிப் பிரமாண நிகழ்ச்சியின்போது அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, “இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுச்சேரி ஆட்சிப் பரப்பு” என உறுதிமொழியை வாசித்தார்.

 

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து ‘மத்திய அரசு’ என்று அழைப்பதற்குப் பதிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மற்றும் கட்சியினர் ‘இந்திய ஒன்றிய அரசு’ என்று பயன்படுத்துகின்றனர்.  அதற்கு பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் பாஜக கூட்டணி அரசு அமையும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் ‘இந்திய ஒன்றியம்’ என அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ‘இந்திய ஒன்றியம்’ என்ற வார்த்தை பயன்பாடு குறித்த சர்ச்சைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. 

 

Puducherry Governor's House explains 'Union' controversy

 

அதில், “புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இரு தினங்களுக்கு முன்பு புதிய அமைச்சர்களுக்கு தமிழில் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். 40 ஆண்டுகளுக்குப் பின் பெண் அமைச்சர் ஒருவர் பதவியேற்ற பெருமைமிகு நிகழ்வும் நடந்தேறியுள்ளது. அத்தகைய பெருமை மிக்க நிகழ்வில் அரசியலமைப்புச் சட்டத்தின்படி பல ஆண்டு காலமாக புதுச்சேரி அரசால் மரபாக பயன்படுத்தப்பட்ட தமிழ் உறுதிமொழி படிவத்தில் எந்த மாறுதலும் இல்லாமல் தமிழில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இந்தப் பெருமையை மறைக்கும் அளவுக்கு ‘இந்திய ஒன்றியம்’ என்ற வார்த்தை வேண்டுமென்று திரித்துக் கூறப்பட்டுவருகிறது. 'ஒன்றிய அரசு' என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை.

 

ஆனால் 'ஒன்றிய அரசு' என்று துணைநிலை ஆளுநர் கூறினார் என்று பொத்தாம் பொதுவாக கருத்து தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறு தமிழ்நாடு அமைச்சர்கள் பதவியேற்கும்போது 'தமிழக அமைச்சர்களாக பதவியேற்கிறோம்' என்று கூறினார்களோ, அதேபோல் Indian union territory of puducherry என்ற வாசகம் 'இந்திய ஒன்றியம் புதுச்சேரி ஆட்சிப் பரப்பு' என மிக அழகாக வெகு காலத்திற்கு முன்பே புதுச்சேரி தமிழ் அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இந்தப் படிவம்தான் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து அதன்பின்பு இந்திய ஆட்சிக்குட்பட்டதால் Indian union territory என்கிறார்கள். அதாவது ‘இந்திய ஒன்றிய ஆட்சிப் பரப்பு’. அதனால்தான் ஒன்றியம் என குறிப்பிடுவது union territory என்ற யூனியன் பிரதேசமான புதுச்சேரியைத்தான். இங்கு எங்கேயுமே மத்திய அரசு என்று குறிப்பிடப்படவில்லை.

 

Puducherry Governor's House explains 'Union' controversy

 

அதனால் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறியதாக திரித்துக் கூறுவது கண்டிக்கத்தக்கது. புதுச்சேரி இந்திய அரசின் ஆளுமைக்கு உட்பட்டிருக்கும் நிலப்பரப்பு. அதனால் 'இந்திய ஒன்றிய புதுச்சேரி நிலப்பரப்பு' என்றுதான் சொல்கிறோமே தவிர, இந்திய தேசத்திற்கான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா அங்கே நடைபெறவில்லை. எனவே மாநில அரசுகளின் பதவியேற்பு விழா படிவத்தில் மத்திய அரசு என்ற வார்த்தை இடம்பெறாது. அவ்வாறு இருக்கையில் புதுச்சேரியில் மட்டும் ஒன்றிய அரசு என்று சொல்லப்பட்டது என்று சொல்வது உள்நோக்கம் கொண்டது. ஆகவேதான் இந்த விளக்கம் தேவைப்படுகிறது. 

 

தமிழ் மண்ணில் தமிழில் பதவியேற்ற பெருமையை நிலைநிறுத்த வேண்டும். ஆனால் அதன் மாண்பைக் குறைக்கும் வகையில் ஒன்றிய என்ற சொல்லாடல் சிலரால் தவறாக கருத்து பரப்பப்படுகிறது. இதுபோன்ற சலசலப்புகளால் பலரது தியாகத்தால் உருவான பலமான இந்திய இறையாண்மையைக் குறைக்க முயல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' - சினிமா வசனத்தில் பதிலளித்த தமிழிசை

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Tamilisai replied in the movie dialogue 'I'm back and tell you'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும், தெலுங்கானா ஆளுநராகவும் இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலின் 50வது தொடக்க விழாவிற்கு சென்ற தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். எதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலில் நிற்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், 'தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது. என்னையே காலையிலிருந்து ட்விட்டரில் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் இந்த தாக்குதல் வர வர நாங்கள் ஆக்குதலை அதிகரிப்போம் என தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக களம் எங்களுக்கு வெற்றிகரமாக இருக்கிறது. நான் உங்கள் சகோதரியாக, அக்காவாக திரும்பி வந்திருக்கிறேன். திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ எனத் திரைப்பட வசனத்தை பேசினார்.

Next Story

வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Opposition candidates shared congratulations

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வேட்புமனுவை சென்னை அடையாறில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுலரிடம் தி.மு.க. சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அ.தி.மு.க. சார்பில் ஜெயவர்தன், பா.ஜ.க. சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இன்று (25.03.2024) தாக்கல் செய்தனர்.

இத்தகைய சூழலில் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேட்டியளித்துக் கொண்டு இருந்தார். அதே போன்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்த பிறகு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த தமிழச்சி தங்கபாண்டியன் அங்கே இருந்த தமிழிசை சௌந்தரராஜனைப் பார்த்த உடன் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஒருவருக்கு ஒருவர் கை குழுக்கி கொண்டு நலம் விசாரித்துக் கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Opposition candidates shared congratulations

இதே போன்று விருதுநகரில் வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு வந்த தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரனும், பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமாரும் கை குழுக்கி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

Opposition candidates shared congratulations

மேலும் நாமக்கல் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் தமிழ் மணியும், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் கேபி. ராமலிங்கமும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணியும் கே.பி. ராமலிங்கத்திடம் கை குழுக்கி வாழ்த்துகளை தெரிவித்தார். அதே போன்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும், தி.மு.க. கூட்ட்ணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிடும் நாவாஸ் கனியும் சந்தித்து ஒருவருக்கு ஒருவர் கைகளை குழுக்கி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.