
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம்(12.6.2025) மதியம் 1.39 மணிக்கு பேயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் லண்டனை நோக்கிப் புறப்பட்டது. 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகளுடன் கிளம்பிய இந்த விமானம் புறப்பட்ட 30 விநாடிகளில் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. இதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு விமான கேப்டன் சுமீத் சபர்வால் விமான கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு மேடே அழைப்பை(விமானம் பேராபத்தைச் சந்திக்கும் சமிக்ஞையாகும்) விடுத்துள்ளார்.
இதையடுத்து விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேப்டன் சுமீத் சபர்வாலை தொடர்பு கொள்ள முயன்றபோது, தொடர்பு கிடைக்கவில்லை. ஆனால் அதற்குள் விமானம் விபத்தில் சிக்கி வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். அவரை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விமானம் வெடித்துச் சிதறி விழுந்ததில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் மாணவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
உயிரிழந்த 241 பேரும் ஏகப்பட்ட கனவுகளையும், லட்சியங்களையும், சந்தோஷத்தையும் தன்னுடன் சேர்த்து எடுத்துக் கொண்டு அந்த விமானத்தில் பயணித்திருந்தனர். ஆனால், அவை எல்லாம் தற்போது அகமதாபாத் காற்றோடு கரைந்திருக்கிறது. இந்த நிலையில் தான் உயிரிழந்தவர்கள் பற்றி தொடர்ந்து வெளியாகும் தகவல்கள் பலரையும் கலங்கச் செய்துள்ளது.
அந்த வகையில், கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக பயணத் திட்டத்தை மாற்றியமைத்த பெண் விமான விபத்தில் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ராபி - ஹர்ப்ரீத் கவுர் ஹோரா தம்பதியினர். ராபி லண்டனில் பணியாற்றி வரும் நிலையில் அவரது மனைவி ஹர்ப்ரீத் கவுர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தனது கணவரை பார்த்தற்காக 19 ஆம் தேதி ஹர்ப்ரீத் கவுர் லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது கணவரின் பிறந்த நாள் 16 ஆம் தேதி என்பதால் அதற்கு முன்பே சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று நினைத்த ஹர்ப்ரீத் கவுர் கடந்த 12 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் புறப்பட்டுள்ளார். ஆனால் விபத்தில் சிக்கி உயிரிழந்தது குடும்பத்தாருக்குப் பேரதிர்ச்சியாக மாறியுள்ளது.