
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் (12.06.2025) மதியம் லண்டன் கேட்விக் நகரை நோக்கிச் செல்ல முற்பட்டது. அப்போது விமானத்தில் திடீரென ஏற்பட்ட இன்ஜின் செயல் இழப்பால் விமானம் புறப்பட்ட 5வது நிமிடத்திலேயே விபத்தில் சிக்கியது. அதாவது விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணித்த 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 229 பயணிகள் என மொத்தம் 241 பேர் உயிரிழந்துள்ளதாக ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் தப்பிய நிலையில் விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு தொடர்ந்து விசாரணையானது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விமானியின் கடைசி ஆடியோ மெசேஜ் வெளியாகி இருக்கிறது. அதில் 'MayDay... MayDay... MayDay... No Power... No Thrust... Going To Unable to Lift' என விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி சுமித் சபர்வால் அனுப்பிய கடைசி ஆடியோ மெசேஜ் வெளியாகி இருக்கிறது. 'MayDay' என்பது கப்பல் மற்றும் விமானத்தில் நெருக்கடியில் இருக்கும் போது நாங்கள் ஆபத்தில் இருக்கிறோம் என சொல்லும் சங்கேத வார்த்தை என்றும் கூறப்படுகிறது.