
பாமகவின் நிறுவனர் ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அதிகாரம் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பாமக இரண்டு அணியாக பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் தீர்வு எட்டப்படாத சூழலே நீடிக்கிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.
ராமதாஸால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களும் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அண்மையில் பனையூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ் பொதுக்குழுவை கூட்டி மாவட்ட நிர்வாகிகளை நியமிக்க அறிவுறுத்தி இருந்த நிலையில் இன்று தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டமானது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ராமதாஸ் நடத்தும் கூட்டத்திற்கு வந்த வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 'ராமதாஸ் தலைமையிலான அணி தான் உண்மையான பாமக. பாமக நிர்வாகிகள் நியமனத்தில் தேர்தல் ஆணையம் குறுக்கிட முடியாது' என தெரிவித்துள்ளார்.

கடந்த முறை செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், 'பாமகவின் பொதுச்செயலாளர் வடிவேல் ரணவனனை காணவில்லை. ஏதோவொரு செவன் ஸ்டார் ஹோட்டலில் மது அருந்திக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 100 ரூபாய் வழங்கலாம்' என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாமகவிற்கு புதிய பொதுச்செயலாளரை ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். பாமக மாணவரணி செயலாளராக இருந்த முரளி சங்கர் பாமகவின் மாநில பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதோடு, வடிவேல் ராவணனை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.