Skip to main content

“பெண்ணாக இருப்பது குற்றமாகிவிட்டது” - பிரியங்கா காந்தி தாக்கு

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
 Priyanka Gandhi criticized Uttarpradesh governmet and says Being a woman has become a crime

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் தொழிலதிபர் ஒருவர் செங்கல் சூளை ஒன்று நடத்தி வருகிறார். இந்த சூளையில், 2 சிறுமிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உட்படப் பலர் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில், கடந்த வாரம் இரண்டு சிறுமிகளும் வயல்வெளிக்குச் சென்றுள்ளனர். மாலை சென்ற இவர்கள் இரவு வரை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவர்களது குடும்பத்தினர், வெளியே சென்று தேடி வந்துள்ளனர். அப்போது, அருகே உள்ள மரம் ஒன்றில் 2 சிறுமிகளின் உடல்கள் தூக்குப் போட்ட நிலையில் இருந்தன.

இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள், இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், 2 சிறுமிகளின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், செங்கல் சூளை நடத்தி வரும் தொழிலதிபரின் 18 வயது மகன் மற்றும் அவருடைய 19 வயது மருமகன் இருவரும் சேர்ந்து, அந்த 2 சிறுமிகளுக்கு கட்டாயப்படுத்தி மதுபானம் கொடுத்துள்ளனர். இதில் மயக்கமடைந்த சிறுமிகளை, இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்னர், இதனை தங்கள் செல்போன் மூலம் வீடியோவாகவும் எடுத்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் தொழிலதிபர் மற்றும் அந்த இளைஞர்கள் 2 பேர் என 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், செங்கல் சூளை தொழிலதிபர் ராம்ரூப் நிஷாத் (48), அவரது மகன் ராஜு (18), மருமகன் சஞ்சய் (19)  ஆகியோர் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவந்தது. மேலும், அவர்களின் செல்போனில் இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

ஒரு வாரத்திற்கு முன்பு சிறுமிகள் தூக்குப்போட்டு இறந்த நிலையில், அவர்களில் ஒருவரின் தந்தையின் உடலைத் தூக்குப் போட்ட நிலையில் போலீசார் மீட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்ட அடுத்த ஒரு வாரத்திற்குள் அவரது தந்தை மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘கான்பூரில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டனர். தற்போது அந்த சிறுமிகளின் தந்தை ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் சமரசம் செய்ய அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளும், பெண்களும் நீதி கேட்டால், அவர்களது குடும்பங்களை அழிக்கும் விதியாகிவிட்டது. உன்னாவ், ஹத்ராஸ் முதல் கான்பூர் வரை எங்கு பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டாலும், அவர்களது குடும்பங்கள் அழிக்கப்படுகின்றன. சட்டம் என்று எதுவும் இல்லாத இந்தக் காட்டில் பெண்ணாக இருப்பது குற்றமாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, மாநிலத்தின் கோடிக்கணக்கான பெண்கள் என்ன செய்ய வேண்டும், அவர்கள் எங்கு செல்ல வேண்டும்?” என்று பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மருத்துவம் பார்ப்பது போல் வந்து தம்பதியைக் கழுத்தறுத்து படுகொலை; அதிரவைத்த கொடூரச் சம்பவம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Shocking incident on strangled the couple in chennai

ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் சிவன் நாயர். இவர், தனது வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இவர்களது மகன், இதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவர்களது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கம் போல், இன்று சிவன் நாயர் தனது வீட்டில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார். அப்போது, சிகிச்சை பார்ப்பது போல வந்த மர்ம நபர்கள் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பிரதான பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை அடுத்து 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனரா? என்றும், குடும்ப தகராறு காரணமாக கொலை நடத்தப்பட்டு இருக்குமா? என்ற கோணங்களிலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்தப் பகுதியில், எங்கும் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசாருக்கு சவாலாக உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆவடியில் கணவன் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.