
திருமணம் ஆகி 36 நாட்களே ஆன நிலையில் கறிகுழம்பில் விஷம் வைத்து கணவனை மனைவியே கொன்ற சம்பவம் ஜார்க்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மையில் மேகாலயாவில் திருமணமான புதுமண தம்பதி ஹனிமூன் சென்றபோது கணவனை மணப்பெண்ணே திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் ஜார்கண்டில் நிகழ்த்த இந்த சம்பவம் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டம் பஹோகுந்தர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுனிதா(22). சதீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரகுநாத் சிங் என்பவருக்கும் சுனிதாவிற்கு கடந்த மே 11ஆம் தேதி இரவு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்திலிருந்து ரகுநாத் சிங்கை தனக்கு பிடிக்கவில்லை என சுனிதா தன்னுடைய பெற்றோர்களிடத்தில் சொல்லி வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் பெற்றோர்களின் கட்டாயத்தின் பேரில் அவர் ரகுநாத் சிங்குடன் சென்றுள்ளார்.
சுனிதாவுக்கும் ரகுநாத் சிங்கிற்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை ஏற்பட்டதால் இருவீட்டாரும் கடந்து ஜூன் 5ஆம் தேதி விஷ்ணுப்பூரில் வைத்து இரு வீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இரண்டாவது முறையாகவும் சுனிதாவை பெற்றோர் சமாதானம் செய்து கணவருடன் அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி வீட்டில் சமைத்த கறிகுழம்பை சாப்பிட்ட ரகுநாத் சிங்கிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பொழுது அவரது உடலில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. தன்னுடைய மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ரகுநாத் சிங்கின் தாயார் ராஜ்நிதி தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மனைவியான சுனிதா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் போலீசார் சுனிதாவிடம் நடத்திய விசாரணையில் அந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. தோட்டத்தில் உள்ள செடிகளில் பூச்சி இருப்பதால் பூச்சி மருந்து வாங்கி வரும்படி கணவனிடம் சுனிதா தெரிவித்துள்ளார். ஒன்றுக்கு இரண்டு பாக்கெட்களாக பூச்சி மருந்தை வாங்கி வைத்துக் கொண்ட சுனிதா, கறி குழம்பில் போட்டு ரகுநாத் சிங்கை சாப்பிட வைத்தது தெரிய வந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் ஒருவருடன் முறையற்ற தொடர்பில் இருந்த சுனிதா கணவனை கொலை செய்துவிட்டு அவரோடு செல்வதற்கு திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.