Skip to main content

'ஒரே நாடு, ஒரே மின்சாரம்' திட்டம் என்றால் என்ன..?

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

மத்தியில் இரண்டவது முறையாக பதவியேற்றிருக்கும் பாஜக அரசு நேற்று 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

 

one nation one electricity plan

 

 

நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் அவரின் புறநாநூறு பாடலுக்கு பிறகு அனைவரது கவனத்தையும் பெற்றது ’ஒரே நாடு, ஒரே மின்சாரம்’ என்ற திட்டம். ஆதார் முதல் ஒற்றை தேர்தல் வரை நாட்டை ஒருங்கிணைப்பதற்கான திட்டங்கள் என கூறி வரையறுக்கப்பட்ட பல திட்டங்களில் புதிய வரவுதான் இந்த திட்டம்.

இதன் மூலம் நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மின் உற்பத்தி மற்றும் பகிர்மான அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு மின்விநியோகம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனல்மின் நிலையம், அணுஉலை, நிலக்கரி என நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், பல்வேறு முறைகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

இதில் நாட்டின் சில மாநிலங்கள் மின்சார தன்னிறைவு பெற்றவையாகவும், சில மாநிலங்கள் மின்பற்றாக்குறை மாநிலங்களாகவும் உள்ளன. இந்த நிலையில் தன்னிறைவடைந்த மாநிலங்கள் தங்களது உபரி மின் தயாரிப்பை பற்றாக்குறை மாநிலங்களுக்கு விற்று பணம் சம்பாதிக்கின்றன. கடந்த 2013 ஆம் ஆண்டே இந்தியாவில் உள்ள அனைத்து மின்சாரம் சார்ந்த கட்டமைப்புகளும் இணைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்மானம் மற்றும் மின்கட்டணங்கள் நிர்ணயம் ஆகியவை அனைத்தும் மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படும். மேலும் நாடு முழுவதும் ஒரே மின்கட்டணம் நிர்ணயிக்கப்படும். இதனால் சில மாநிலங்களில் மின்கட்டணம் குறைந்தாலும், பல மாநிலங்களில் உயரும் நிலையம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல இதன்மூலம் தமிழக அரசு கொடுத்து வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுவதிலும் சிக்கல் எழலாம் எனவும் கருத்துக்கள் எழுந்து வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்