Skip to main content

முன்விரோதமா? வேறு காரணமா?-போலீசார் தீவிர விசாரணை!

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
Was the incident in Nella a incident?-Police intensive investigation

நெல்லையில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் அந்தக் கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி, வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் ராஜா. 35 வயதான தீபக் ராஜா மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று இரண்டு மணியளவில் தான் திருமணம் செய்துகொள்ளும் மற்றும் அவரது தோழிகளுடன் சேர்ந்து கேடிசி நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். சாப்பிட்ட பின்னர் வாகனத்தை எடுப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது மறைந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் தீபக் ராஜாவை சரமாரியாக பட்டப்பகலிலேயே வெட்டி படுகொலை செய்தனர். கொலையில் ஈடுபட்ட அனைவரும் முகத்தை மறைத்தபடி  துணியைக் கட்டி இருந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே தீபக் ராஜா துடிதுடித்து உயிரிழந்தார்.உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பாளையங்கோட்டை காவல் துறையினர் தீபக் ராஜாவின் உடலைக் கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்பொழுது கிடைக்கப்பெற்ற சிசிடிவி ஒன்றில் ஆறு பேர் கொண்ட கும்பல் தீபக் ராஜாவை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யும் அந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் நிகழ்ந்தது அரசியல் சார்ந்த கொலையா? அல்லது ஆணவக் கொலையா? என்ற குழப்பங்கள் நீடித்து வருகிறது. தீபக் ராஜா காதல் திருமணம் செய்ய இருந்ததாக கூறப்படும் நிலையில் அப்பெண்ணின் முன்பு கொலை நிகழ்ந்துள்ளது. இருப்பினும் போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பின்னரே இக்கொலை குறித்து தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் கொலை வழக்கில் தீபக் தொடர்புடையவர் என்பதால் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்