Skip to main content

சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கர்நாடகா துணை முதல்வர்; சட்டசபையில் பரபரப்பு!

Published on 17/06/2025 | Edited on 17/06/2025

 

Karnataka Deputy Chief Minister falls off bicycle n Assembly

கர்நாடகா மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், கர்நாடகா சட்டசபையில் இன்று (17-06-25) காலை உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்வு நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நடைப்பயணத்தை கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் மாநில வனம், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரே ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், “நமது குழந்தைகள் மரங்களையும் தண்ணீரையும் காப்பாற்ற நாங்கள் ஊக்குவிக்கிறோம். அதுமட்டுமல்லாமல், பிளாஸ்டிக்கை தடை செய்து சுத்தமான காற்றைப் பெறவும் ஊக்குவிக்கிறோம். பசுமைக்கும், சுத்தமான சூழலுக்கும் பெயர் பெற்றது பெங்களூரு. எனவே, இதை ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு குழந்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உலகம் முழுவதும் இதுபோன்ற விதான சவுதா இல்லை. மாணவர்கள் விதான சவுதாவைப் (கர்நாடகா சட்டசபை) பார்க்க வர வேண்டும். நாம் அனைவரும் வந்து அதைப் பார்க்க வேண்டும். 

இந்த நிகழ்ச்சியை வேறு எங்காவது நடத்தியிருக்கலாம். ஆனால் விதான சவுதாவைப் பார்க்க இங்கே ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த நிகழ்ச்சி ஜூன் 5 ஆம் தேதி நடைபெறவிருந்தது. ஏதோ காரணத்தால், அதைச் செய்ய முடியவில்லை. இங்கு வானிலை நன்றாக இருக்கிறது. மழை பெய்து கொண்டிருக்கிறது” எனப் பேசினார். 

அதனை தொடர்ந்து, நடைப்பயணத்தை முடித்துவிட்டு சட்டசபை வளாகத்துக்கு டி.கே.சிவக்குமார் சைக்கிளில் வந்தார். அப்போது சைக்கிளை நிறுத்தும்போது அவர் திடீரென்று நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனை கண்டு சுதாரித்துகொண்ட பாதுகாப்பு படையினர், உடனடியாக அவரை தாங்கிப் பிடித்து தூக்கிவிட்டனர். லேசாக விழுந்ததால் அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. சட்டசபை வளாகத்தில் சைக்கிளில் இருந்து டி.கே.சிவக்குமார் கீழே விழுந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்