
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்டம் சுப்பிரமணியபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஜாதி, வருமானம், இருப்பிடம், பிறப்புச்சான்று உள்ளிட்ட சான்றுகள் கொண்டு வராத ஒரு வகுப்பில் படிக்கும் 25 க்கும் மேற்பட்ட மாணவிகளை நேற்று திங்கள் கிழமை வகுப்பு ஆசிரியர் வகுப்பறைக்கு வெளியே முட்டி போட வைத்து ஒவ்வொரு மாணவியும் 100 முறை தோப்புக்கரணம் போட வைத்ததாக கூறப்படுகிறது. இதில் சில மாணவிகளுக்கு வீட்டிற்குச் சென்றதும் காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். மற்றொரு பக்கம் சக மாணவிகள் முன்பு தோப்புக்கரணம் போட்டதால் அவமானமும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த பெற்றோர்கள் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு இன்று பள்ளிக்கு சென்று கேட்பதாக கூறியிருந்தனர்.

இது பற்றி நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியானது. இந்த நிலையில் இன்று செவ்வாய்க் கிழமை காலை தோப்புக்கரணம் போட்டு காய்ச்சல் ஏற்பட்ட மாணவிக்கு நடக்க முடியாத அளவில் வலி ஏற்பட்டதால் மாணவியின் தந்தை மாணவியை தனது மோட்டார் சைக்கிளிலில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற போது விபத்து ஏற்பட்டு மாணவியின் தந்தையும் காயமடைந்துள்ளார். தொடர்ந்து பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், எஸ் எம் சி நிர்வாகிகள் பள்ளிக்குச் சென்று கேட்ட போது பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு நினைவுக்கு வரவேண்டும் என்று தோப்புக்கரணம் போடச் சொன்னது உண்மை தான். இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காது. நடந்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
அதே போல பள்ளித் தலைமை ஆசிரியரும் இந்தச் சம்பவம் என் கவனத்திற்கு வரவில்லை. இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக கூறினார். இதனை ஏற்ற பெற்றோர்கள் இனிமேல் மாணவிகளை மன ரீதியாக துன்புறுத்த வேண்டாம் என்று கூறிச் சென்றனர். இதனால் சுப்பிரமணியபுரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரனை செய்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.