Skip to main content

ஹெலிகாப்டர் விபத்து; ராணுவ சீருடையில் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த மனைவி!

Published on 17/06/2025 | Edited on 17/06/2025

 

Wife tearful military uniform to her husband funeral Helicopter crash rajasthan

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 15ஆம் தேதி டேராடூனில் இருந்து குழந்தை உள்பட 7 பேருடன் கேதார்நாத் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று கெளரிக்குண்ட் என்ற வனப்பகுதியில் கீழே விழுந்து விபத்தானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த ஹெலிகாப்டர் விபத்தில் விமானி லெப்டினன்ட் கர்னல் (ஓய்வு) ராஜ்வீர் சிங் சவுகான் உள்பட 7 பேர் பலியானார்கள். கர்னல் ராஜ்வீர் சவுகான் ராணுவத்தில் 14 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற்ற பிறகு, லெப்டினன்ட் கர்னல் ஆர்யன் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சிவில் ஹெலிகாப்டர் விமானியாக சேர்ந்தார். இவர், கடந்த 2011இல் லெப்டினன்ட் கர்னல் தீபிகா சவுகானை திருமணம் செய்து கொண்டார். 14 வருடத்திற்குப் பிறகு, நான்கு மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட, வரும் ஜூன் 30ஆம் அன்று பிரமாண்டமான விழாவைத் திட்டமிட்டிருந்தனர்.

இந்த சூழ்நிலையில், தான் உத்தரகாண்ட் விமான விபத்தில் விமானி ராஜ்வீர் சிங் சிக்கி பலியானார். இவரது, இறுதிச் சடங்கு இன்று (17-06-25) ராஜஸ்தானின் ஜெய்பூரில் நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தின் போது ராஜ்வீர் சிங்கின் மனைவி லெப்டினன்ட் கர்னல் தீபிகா சவுகான் ராணுவ சீருடையில் கண்ணீருடன் நடந்து சென்று காட்சி காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது. 

இது தொடர்பான வீடியோ காட்சியில், கர்னல் தீபிகா சவுகான் தனது கணவரின் இறுதி ஊர்வலத்திற்கு தலைமை தாங்கி கணவரின் புகைப்படத்தை கையில் ஏந்தி அழுதுகொண்டே செல்கிறார். கர்னல் ராஜ்வீர் சவுகானின் இறுதி ஊர்வலத்தின் போது அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரும், இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். 

சார்ந்த செய்திகள்